Published : 13 Nov 2019 04:09 PM
Last Updated : 13 Nov 2019 04:09 PM
306 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன.
பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கல்லக்குடி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் அரசால் தடைசெய்யப்பட்ட 306 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து ஊராட்சி நிர்வாகத்திடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.
முன்னதாக, பள்ளியில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை திருமலைச் செல்வி தலைமை வகித்து, பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விளக்கினார்.
இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் தெருக்களில் கிடந்த 306 கிலோ பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்து, கல்லக்குடி ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். அதிகபட்சமாக 49 கிலோ நெகிழிப் பொருட்களைச் சேகரித்த கோகுல்நாத் என்ற மாணவருக்கு முதல் பரிசும், மற்றவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
இவர்களுடன் ஆசிரியர்கள் சாந்தி, தீபக், பாரதி, ஆனந்த்,கவிதா ஆகியோரும் பிளாஸ்டிக் பொருட்களைச் சேகரித்தனர். இப்பணியில் ஈடுபட்ட மாணவர்களை பொது மக்கள் வெகுவாகப் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT