Published : 13 Nov 2019 12:31 PM
Last Updated : 13 Nov 2019 12:31 PM
ஜேஎன்யூ மாணவர்களுக்கு தங்களின் ஆதரவை அளிப்பதாக டெல்லி, இந்து பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 3-வது பட்டமளிப்பு விழா கடந்த 11-ம் தேதி ஏஐசிடிஇ அரங்கத்தில் நடைபெற்றது. இதில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே உணவு விடுதிக் கட்டண உயர்வு, உடைக் கட்டுப்பாடு ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, ஜேஎன்யூ மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு கருதி ஏராளமான காவல் துறையினரும் சிஆர்பிஎப் வீரர்களும் பல்கலைக்கழகத்தில் குவிக்கப்பட்டனர். எனினும் மாணவர்களின் தொடர் போராட்டத்தால் போலீஸார் தடியடி நடத்தினர்.
இந்நிலையில் இதுகுறித்து நேற்று டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ''காவல்துறை மற்றும் துணை ராணுவம் உள்ளிட்ட அரசு இயந்திரங்களின் 2 துணை கொண்டு, மாணவர்களின் ஒருமித்த குரல்களை ஒடுக்கும் முயற்சி அபாயகரமான அளவில் அதிகரித்திருக்கிறது.
அதனால் ஜேஎன்யூவின் தைரியமான காம்ரேடுகளுக்கு எங்களின் ஒற்றுமைக் கரத்தை நீட்டுகிறோம். ஆளும் அதிகாரத்தின் அடக்குமுறை எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை எங்களின் கடைசி மூச்சு வரை எதிர்ப்போம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல பனாரஸ் இந்து பல்கலைக்கழக மாணவர்கள் என்று கூறிய இளைஞர் குழுவொன்று, வாரணாசியில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது. அவர்கள், ஜேஎன்யூ மாணவர்களுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர். ''பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஜேஎன்யூ மாணவர் சங்கத்துக்கு ஆதரவு அளிக்கிறது'' என்றும் ''கல்வித் துறையை வணிக மயமாக்காதீர்கள்'' என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT