Published : 13 Nov 2019 08:12 AM
Last Updated : 13 Nov 2019 08:12 AM

உடல் உறுப்பு தானத்தை ஊக்கப்படுத்த ஆண்டுதோறும் ‘சூரஜ் சேத்தி விருது’- ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு

உடல் உறுப்பு தானத்தை ஊக்கப் படுத்த, ஆண்டுதோறும் ‘சூரஜ் சேத்தி’ விருது வழங்கப்படும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

கஞ்சம் மாவட்டத்தில் உள்ள பஞ்சநகரில் வசிக்கும் சூரஜ் சேத்தி என்பவர் சூரத் பகுதியில் வேலைப்பார்த்து வந்தார். இவருக்கு அக்டோபர் 29-ம் தேதி எதிர்பாரதவிதமாக சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சூரஜ்க்கு, மூளை சாவு ஏற்பட்டது. இதனையடுத்து, சூரஜின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய, அவரது பெற்றோர்கள் முன்வந்தனர்.

இதனால், சூரஜின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கண்கள் தானமாக பெற்று, உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த 6 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், சூரஜின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகையில், “சூரஜின் பெற்றோரின் செயல், உடல் உறுப்பு தானம் குறித்து சமுதாயத்தில் ஒரு உத்வேகத்தை கொடுக்கும். இது ஒரு முன்மாதிரியான செயலாகும்” என்றார்.

இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், “ஒவ்வொரு ஆண்டும் உடல் உறுப்பு தானம் செய்யும் நபர்களுக்கு, சூரஜ் சேத்தி பெயரில் விருது வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் சூரஜ் செய்த சேவையும் புகழும் அழியாமல் இருக்கும்” என்று கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில் மாநில வனத்துறை அமைச்சர் பி.கே.அருகா கூறுகையில், “ இதுபோன்ற விருதுகளால் உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வை மேம்படுத்த உதவும்” என்றார்.

முன்னதாக, சூரஜின் பெற்றோருக்கு ரூ.5 லட்சம் மற்றும் 'பிஜு பக்கா கர் யோஜனா' திட்டத்தின் கீழ் ஒரு வீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x