Published : 13 Nov 2019 07:23 AM
Last Updated : 13 Nov 2019 07:23 AM

கல்வி நிறுவனங்களோடு கற்றல் நின்றுவிடக் கூடாது; மாணவர்கள் தொடர்ந்து அறிவை வளர்க்க வேண்டும்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வேண்டுகோள்

‘‘கல்வி நிறுவனங்களுடன் கற்றல் நின்றுவிடக் கூடாது. வாழ்நாள் முழுவதும் மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்’’ என்று சென்னை விஐடியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள சென்னை விஐடி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய ஜவுளி மற்றும் பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று 1,701 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:

இங்கு 1,701 மாணவர்கள் பட்டங்கள் பெற்றுள்ளீர்கள். பட்டம் பெறுவது என்பது, உங்கள் எதிர்கால வாழ்வை திட்டமிடுவதற்கான தொடக்கம்தான். கல்வி கற்பது என்பது, கல்வி நிறுவனங்களோடு நின்று விடுவதில்லை. அது தொடர்ந்து நடைபெற வேண்டிய நெடுந்தூரப் பயணம். அதற்கு எல்லையே இல்லை. மாணவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, ஏராளமான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. உயர்கல்விக்காகவும், ஆய்வு திட்டங்களுக்காகவும் பெரும் நிதி அளித்து ஊக்கப்படுத்துகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு நீங்களும் வளர்ந்து, நாட்டையும் வளப்படுத்த முன்வர வேண்டும். ‘கிராமங்களில்தான் இந்தியா வாழ்கிறது’ என்ற மகாத்மா காந்தியின் வார்த்தைகளை உணர்ந்து, கிராம வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மாணவர்கள் உறுதுணையாகத் திகழ வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசினார்.

விழாவில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது: இந்தியா 5 பில்லியன் டாலர் பொருளாதார நாடாகமாறும் வகையில், மத்திய அரசு திட்டமிட்டு செயலாற்றி வருகிறது. அது கல்வி வளர்ச்சியால் மட்டுமே சாத்தியமாகும். கல்விக்கான ஒதுக்கீட்டை 4 விழுக்காட்டில் இருந்து 6 விழுக்காடாக உயர்த்த வேண்டும். அதேபோல், உயர்கல்வி வரை இலவசமாக கற்பிக்கப்பட வேண்டும்.
இங்கு தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் 60 ஆயிரம் மருத்துவ இடங்கள் மட்டுமே உள்ளன. இதை அதிகரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். 100 நாடுகளில் இருந்து மாணவர்கள், விஐடியில் கல்வி கற்க வேண்டும் என்ற குறிக்கோளோடு திட்டமிட்டு செயலாற்றி வருகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x