Published : 12 Nov 2019 10:04 AM
Last Updated : 12 Nov 2019 10:04 AM

சுலபத்தவணையில் சிங்காசனம் 5: அடர்ந்த காட்டில் ஆராய்ச்சி செய்யலாம்!

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

நகர நெரிசலில் கான்கிரீட் கோபுரங்களில் குளிர்பதன சிறைகளில் அடைபட்டிருக்க விருப்பமில்லையா? இயற்கையின் நுரையீரல்களான மாசுபடாத காடுகளில் வேலை கிடைத்தால் எப்படி இருக்கும்? அடர்ந்த காட்டிலும் அது தொடர்பான ஆய்வுக்கூடங்களிலும் ஆராய்ச்சி செய்வது சாகசமானது கூடவே சுவாரசியமுமானது.

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம், தேசிய அளவில் காடுகள் சார்ந்த ஆராய்ச்சி, கல்வி மற்றும் விரிவாக்க முயற்சிகளை ஒருங்கிணைக்கிறது. 1876-ல் டேராடூனில் தொடங்கப்பட்ட வனப் பள்ளிதான் (Forest School) இந்தியாவில் வன அறிவியல் துறைக்கான தொடக்கப்புள்ளி. இதன் வளர்ச்சியாக 1986-ல், இந்தியவனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக் கழகம் (Indian Council of Forestry Research and Education – ICFRE) தொடங்கப்பட்டது. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் என்ற அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற அமைப்பாக ஐ.சி.எஃப்.ஆர்.ஈ இயங்கிவருகிறது.

ஐ.சி.எஃப்.ஆர்.ஈ.ஆய்வகங்கள்

டேராடூனிலுள்ள வன ஆய்வு நிறுவனத்தோடு ஒன்பது பிராந்திய ஆய்வு நிலையங்கள் காடுகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கின்றன. ஜோத்பூர், சிம்லா, ஹைதராபாத், கோயம்புத்தூர், ரான்சி, பெங்களூரு, ஜோரட், ஜபல்பூர் ஆகிய இடங்களில் ஆய்வு நிலையங்கள் உள்ளன. கோயம்புத்தூரிலுள்ள, காட்டு மரபியல் மற்றும் மரவிருத்தி நிறுவனம் (Institute of Forest Genetics and Tree Breeding-IFGTB) ஐ.சி.எஃப்.ஆர்.ஈ நிறுவனங்களில் ஒன்று.

என்னென்ன ஆய்வுகள்?

காடு வளர்ப்பு, காட்டு பாதுகாப்பு, காலநிலைமாற்றம், காட்டு பொருட்கள் மேம்பாடு, காட்டு விவசாயம், நோய்-பூச்சி தடுப்பு உட்பட பல ஆய்வுகள் நிகழ்கின்றன. இமயமலைக்காடுகள், வெப்ப மண்டலக்காடுகள், வறண்ட நிலக்காடுகள், மழைக்காடுகள் என ஆராய்ச்சிகள் பல வனப்பகுதிகளில் விரிகின்றன.

வனவியல் விஞ்ஞானியாக அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பெற்று விஞ்ஞானிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அறிவியல் முதுநிலை பட்டதாரிகளும், பொறியியல் இளநிலை பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட விண்ணப்பிக்கலாம். (மேலும் விவரங்களுக்கு - icfre.gov.in/recruitment).

எந்தெந்தப் பாடப் பிரிவுகள்?

வனவியல், நீரியல், நீர் மேலாண்மை, உயிரி தொழில்நுட்பம், வேளாண்மை, மண் அறிவியல், தாவரவியல், வேதியியல், பூச்சியியல், விலங்கியல், வேளாண்மை பொருளியல், நுண்ணுயிரியல், மர அறிவியல், கடல் நுண்ணுயிரியல், கடல் அறிவியல், சுற்றுச்சூழல் மேலாண்மை, மரபியல், தாவர மரபியல், விதை அறிவியல் உள்ளிட்டத்துறைகளில் முதுநிலை பட்டமும், வேளாண்மை பொறியியல், கட்டுமானப் பொறியியல் ஆகியவற்றில் இளநிலை பட்டமும் பெற்றவர்கள் வன விஞ்ஞானியாகலாம்.

பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணித பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் மேற்கூறிய கல்வித்தகுதி பெற்றபின் வன விஞ்ஞானியாக முயற்சிக்கலாம்.

(தொடரும்)

கட்டுரையாளர்: ‘எந்திரத்தும்பிகள்: ஹெலிகாப்டர் ஓர் அறிமுகம்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x