Published : 11 Nov 2019 01:52 PM
Last Updated : 11 Nov 2019 01:52 PM

ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும்; முறையாக ஊதியம் அளிக்க வேண்டும்: மேற்கு வங்க ஆளுநர்

ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கான ஊதியம் முறையாக அளிக்கப்பட வேண்டும் என்றும் மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கார் தெரிவித்துள்ளார்.

இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவராக இருந்த மவுலானா அபுல் கலாம் ஆசாத், இந்திய விடுதலைக்குப் பிறகு, முதல் கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வி கிடைக்கவும் நவீன கல்வி முறைக்கும் வித்திட்டவர் ஆசாத். அவர் பிறந்த தினமான இன்று (நவம்பர் 11) தேசியக் கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து நேற்று மாலை தங்கார் அறிக்கையொன்றை வெளியிட்டார். அதில், ''ஆசிரியர்கள் தங்களுக்கான ஊதியத்தொகையைப் பெற போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கும் வருத்தமான காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம். கவலையளிக்கும் இந்த நிகழ்வு, தேசத்தைக் கட்டமைக்கும் கல்வியில் மோசமான விளைவை ஏற்படுத்தி விடுகிறது.

நாட்டின் கல்வி அடித்தளத்துக்கு, அபுல் கலாம் ஆசாத்தின் பங்களிப்பை நினைவுகூரும் விதமாக அவரின் பிறந்த நாள், தேசியக் கல்வி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில், ஆசிரியர்கள் சரியான முறையில், மதிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான ஊதியம் முறையாக அளிக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே ஜாதவ்பூர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தினர், திருத்தி அமைக்கப்பட்ட யூஜிசி ஊதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அவர்களை ஆளுநர் ஜெகதீப் தங்கார் அழைத்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x