Published : 08 Nov 2019 08:03 AM
Last Updated : 08 Nov 2019 08:03 AM
ஆந்திரா
ஆந்திராவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றதில் இருந்து பலஅதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், ஆந்திராவில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கவேண்டும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆந்திர அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:ஆந்திரப் பிரதேச பள்ளிக் கல்வித்துறை, அனைத்து அரசுப் பள்ளிகள், மண்டல ப்ரஜா பரிஷத், ஜில்லா பரிஷத் பள்ளிகளில் உள்ள வகுப்புகளை ஆங்கில வழிக் கல்விக்கு மாற்ற முடிவெடுத்துள்ளது.
இதன்படி 2020- 2021-ம் கல்வியாண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையும், 2021 -2022-ம் கல்வியாண்டு முதல் 9, 10-ம்வகுப்புகளுக்கும் இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநருக்கு மாநில அரசுபிரத்யேக அதிகாரங்களை வழங்கியுள்ளது. அதன்படி, 5 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தெலுங்கு, உருது வழிக்கு இணையாக ஆங்கில வழியில் வகுப்புகளை தொடங்கலாம். இதற்காக ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சிகள் வழங்கப்படும். ஆங்கிலப் புலமை பரிசோதிக்கப்பட்டு புதிய ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
அதேநேரத்தில், தெலுங்கு அல்லது உருது கட்டாயப் பாடமாக அமைக்கப்பட வேண்டும். அரசாணைக்கு இணங்க, ஆங்கில மொழிக் கற்பித்தல் மையங்களும் மாவட்ட ஆங்கில மையங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT