Published : 07 Nov 2019 04:15 PM
Last Updated : 07 Nov 2019 04:15 PM

ரூ.192 கோடி: 'நீட் 2019' மூலம் மத்திய அரசுக்குக் கிடைத்த வருமானம் 

போபால்

நீட் தேர்வின் மூலம் இந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு ரூ.192 கோடியைச் சம்பாதித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் இத்தகவல் வெளியாகியுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள், கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். மருத்துவ கவுன்சிலிங் குழு நடத்தும் கலந்தாய்வுக்கு 2018- 19 ஆம் ஆண்டில் ரூ.1000 கட்டணமாக வசூலிக்கப்பட்டது.

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் ஆர்டிஐ மனுவில், அரசுக்கு நீட் மூலம் கிடைக்கும் வருமானம் குறித்துக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் 15,19,375 மாணவர்களிடம் இருந்து பதிவுக் கட்டணமாக ரூ.1,92,43,22,162 வசூலிக்கப்பட்ட்டதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் ரூ.18,32,87,500-ஐ வசூலித்த கவுன்சிலிங் குழு, அதில் 2,76,78,614 ரூபாயை மட்டுமே கலந்தாய்வுக்காகச் செலவிட்டது. மீதமுள்ள தொகை மத்திய அரசிடம் வழங்கப்பட்டு விட்டதாக, மருத்துவ கவுன்சிலிங் குழு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே வசூலிக்கப்பட்ட தொகை மூலம் கிடைக்கும் வட்டித் தொகையே, வருங்காலங்களில் கலந்தாய்வை நடத்தப் போதுமானதாக இருக்கும் என்றும் அதனால் வருங்காலத்தில் மாணவர்களிடத்தில் கலந்தாய்வுக் கட்டணம் வசூலிப்பது நிறுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன.

ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x