Published : 04 Nov 2019 10:10 AM
Last Updated : 04 Nov 2019 10:10 AM

காமராஜர் துறைமுகம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் கொண்டாட்டம்: ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

சென்னை

காமராஜர் துறைமுகம் சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் சார்பில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் (அக்டோபர் 28 - நவம்பர் 2) கொண்டாடப்பட்டது. "நேர்மையே வாழ்க்கையின் வழி" என்ற இந்த ஆண்டின் விழிப்புணர்வு வாசகத்தை விழிப்புணர்வு வாரத்தின் முதல்நாளன்று அனைத்து ஊழியர்களும்கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நிறைவு நாளான நவம்பர் 2-ம் தேதி நடைபெற்ற விழாவில் காமராஜர் துறைமுகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால், தலைமை விஜிலென்ஸ் அதிகாரி பி.ரவிந்திரபாபு, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக்கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் எம்.என்.மஞ்சுநாதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. ஜூனியர் பிரிவில் கலர் வீல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 7-ம் வகுப்பு மாணவர் பி.எஸ்.சாய் அருண் முதல் பரிசையும், அண்ணா ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவி ஆர்.கே.ரக்சனா 2-ம் பரிசையும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 8-ம் வகுப்பு மாணவர் பி.சாமுவேல் 3-ம் பரிசையும் பெற்றனர். அதேபோல், சீனியர் பிரிவில், வேளச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் டி.அஜய் குமார் முதல் பரிசையும், சிஎஸ்ஐ ஜெஸ்சி மோசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி வி.டெபி பிரிஸ்சில்லா 2-ம் பரிசையும், சென்னை துறைமுகம் பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் ஆர்.பிரதீப் குமார் 3-ம் பரிசையும் வென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x