Published : 31 Oct 2019 08:00 AM
Last Updated : 31 Oct 2019 08:00 AM

சவுதியில் ரூபே அட்டைக்கு அனுமதி: புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

ரியாத்

சவுதி அரேபியாவில் இந்தியாவின் ரூபே அட்டையை அனுமதிப்பதற்கான புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸின் அழைப்பை ஏற்று 2 நாள் அரசு பயணமாக சவுதி அரேபியாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி 28-ம் தேதி சென்றார். அங்கு நடந்த எதிர்கால முதலீடு தொடக்க மாநாட்டில், பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதனையடுத்து, இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத்தை மோடி சந்தித்து பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், இந்தியாவில் பயன்படுத்தப்படும் ரூபே அட்டையை சவுதி அரேபியாவில் பயன்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. ரூபே (RuPay)என்பது இந்திய தேசிய கட்டண நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு கட்டண அட்டை திட்டமாகும்.

இந்த வசதியை இந்திய ரிசர்வ் வங்கி 2012-ம் ஆண்டு தொடங்கியது. ரூபே அட்டையை இந்தியாவில் உள்ள எல்லா ஏடிஎம் இயந்திரத்திலும், ஆன்லைன் வர்த்தகம் செய்யவும் பயன்படுத்தலாம். தற்போது இந்தியாவில் 50 கோடி ரூபே அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இந்த ரூபே முறை சவுதி அரேபியாவில் பயன்பாட்டில் இல்லை.

இதனால், அங்கு வேலை செய்யும் 26 லட்சம் இந்தியர்கள் அங்குள்ள வர்த்தக அட்டையைதான் பயன்படுத்தும் நிலை உள்ளது. ஏற்கனவே, ஐக்கிய அமீரகம், பக்ரைன், சிங்கப்பூர் மற்றும் பூடான் ஆகிய நாடுகளில் ரூபே வசதி உள்ளது. அதேபோல், ஜப்பான், சீனா ஆகிய நாடுகளின் வர்த்தக அட்டையுடன் சுமார் 2.5 கோடி ரூபே அட்டை இணைப்பு பெற்றுள்ளது.

இந்நிலையில், தற்போது கையெழுத்தாகிவுள்ள ஒப்பந்தம் மூலம், சவுதியில் ரூபே அட்டையை பயன்படுத்த முடியும். இதன்மூலம், அங்கு வேலை பார்க்கும் 26 லட்சம் இந்தியர்களும், இந்தியாவுக்கு வரும் சவுதி மக்களும் பயனடைவார்கள். அதேபோல், ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர். அவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x