Published : 29 Oct 2019 09:19 AM
Last Updated : 29 Oct 2019 09:19 AM

காஷ்மீரில் இன்று பள்ளித்தேர்வு தொடக்கம்: 1.6 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்

ஸ்ரீநகர்

காஷ்மீரில் பள்ளிக்கல்வித் தேர்வானது அக்டோபர் 29ம் தேதி இன்று தொடங்குகிறது. அதில் 1.6 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

காஷ்மீர் மாநில பள்ளிக்கல்வி வாரியம் (பிஒஎஸ்இ) சார்பில் ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி தேர்வு நடத்தபட்டது. இதற்கு அடுத்த நாள் ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கு, மத்திய அரசு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து திரும்ப பெறப்பட்டது. அதன்பின் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவியது. இதன் காரணமாக, பள்ளித்தேர்வில் வெறும் 20.13 சதவீத மாணவர்களே கலந்துக் கொண்டு தேர்வு எழுதினர்.

சிறப்பு அந்தஸ்து திரும்ப பெற்றதை தொடர்ந்து, அசம்பாவிதம் நடக்காமல் இருக்க மாநிலம் முழு வதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், தற்போதுதான் கட்டுப்பாடுகள் படிப்படி யாக குறைக்கப்பட்டு, காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. சமீபத்தில்தான் இணைய வசதி, தொலைத்தொடர்பு வசதி ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், பள்ளிக்கல்வி வாரியம் பருவத்தேர்வை மீண்டும் நடத்த முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:காஷ்மீரில் ஆண்டு இறுதி தேர்வை சுமார் 1.6 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். அதற்காக மொத்தம் 1,502 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு தேர்வு அக்டோபர்29-ம் தேதி (இன்று) தொடங்கவுள்ளது. அதில் 65,000 மாணவர்கள் பங்கேற்பார்கள். அதேபோல், 12-ம்வகுப்பு தேர்வு அக்.30-ம் தேதி (நாளை) 633 மையங்களில் தொடங்குகிறது. அதில் 48,000 மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.

11-ம் வகுப்பு தேர்வு நவ. 10-ம்தேதி தொடங்குகிறது. அதில், 47,000 மாணவர்கள் எழுதவுள்ளனர். அவர்களுக்காக 456 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை நல்ல முறையில் நடத்த, காஷ்மீர் மண்டல ஆணையர் பசீர் அகமதுகான் தலைமையில், உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கடந்த 22-ம் தேதி நடந்தது. இதில், தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், மின்சார வசதி, போக்குவரத்து வசதி போன்றவை ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆணையர் வழிக்காட்டுதலின் அடிப்படையில், மாவட்டம் தோறும் தேர்வு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாநில போக்குவரத்துத் துறை அதிகாரி, போலீஸ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் ஒரு குழுவாக இருப்பார்கள். இந்த குழுவானது, தேர்வு முடியும் வரை மாணவர்களுக்கு தேவையான வசதிகளை செய்துக் கொடுப்பார்கள். தேர்வை நல்ல முறையில் நடத்த, 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x