Published : 24 Oct 2019 04:48 PM
Last Updated : 24 Oct 2019 04:48 PM
மங்களூரு
பாடப் புத்தகங்களில் இருந்து திப்பு சுல்தான் பகுதி நீக்கப்பட வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சருக்கு கர்நாடக பாஜக எம்எல்ஏ கடிதம் எழுதியுள்ளார்.
மடிக்கெரி எம்எல்ஏவும் பாஜக தலைவருமான அப்பச்சு ரஞ்சன், கர்நாடக மாநில கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமாருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்டோபர் மாதத் தேதியிடப்பட்டிருந்த அக்கடிதத்தை நேற்று மாலை ஊடகங்களிடம் அளித்தார் ரஞ்சன்.
அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
''திப்பு ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக சித்தரிக்கப்பட்டார். ஆனால் வரலாறு, தவறான தகவல்களுடன் எழுதப்படக் கூடாது. அவர் குடகு, மங்களூரு மற்றும் கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வந்துள்ளார். இதற்குக் காரணம் எல்லை விஸ்தரிப்பே.
மக்களை தனது மதத்துக்கு மதமாற்றம் செய்யவே திப்பு சுல்தான் இங்கு வந்தார். தன்னுடைய ஆட்சிப்பரப்பை அதிகரிக்கவும் அவர் முயற்சித்தார். திப்புவுக்கு கன்னட மொழி மீது எந்த மரியாதையும் இல்லை. அவரின் நிர்வாக மொழி பெர்ஷியனாக இருந்தது.
அவர், மடிக்கெரி என்ற ஊரை ஜஃபராபாத் என்றும் மங்களூருவை ஜலாலாபாத் என்றும் பெயர் மாற்றம் செய்தார். இந்துக் கோயில்களைக் கொள்ளையடித்தார். கிறிஸ்துவ தேவாலயங்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. குடகில், 30 ஆயிரம் குடவர்கள் அவரால் மத மாற்றம் செய்யப்பட்டனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடிதத்தை முதல்வர் எடியூரப்பாவிடமும் விரைவில் வழங்குவேன் என்று பாஜக எம்எல்ஏ ரஞ்சன் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT