Published : 23 Oct 2019 08:54 AM
Last Updated : 23 Oct 2019 08:54 AM

7,500 அரசு பள்ளிகளில் நவம்பருக்குள் ஸ்மார்ட் வகுப்பறை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தஞ்சாவூர்

தமிழகத்தில் 7,500 அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை சாதாரணவகுப்பறையை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றும் பணி நவம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சரஸ்வதி மகால் நூற்றாண்டு நிறைவு விழா

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் நூற்றாண்டு நிறைவு விழா திங்கள் கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளிக் கல்வித் துறையின்செயலர் பிரதீப் யாதவ் தலைமை வகித்தார். இவ்விழாவில், தாமிரப் பட்டயத்தில் பொறிக்கப்பட்ட திருக்குறள் தொகுப்பை பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட, அதை வேளாண்மைத் துறைஅமைச்சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:உலக அளவில் தொன்மைமிக்க நூலகங்களில் 2-வது நூலகமாகச் சரஸ்வதி மகால் நூலகம் உள்ளது. இதைக் காக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. இந்நூலகத்துக்கு ரூ.70 லட்சமாக உள்ள ஆண்டு மானியத்தை ரூ.1 கோடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்புகளைக் கணினிமயமாக்கும் பணி அக்போடபர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.

அரசு பள்ளிகளில் படிக்கின்ற மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும், 7,500 பள்ளிகளில் 6 முதல்8-ம் வகுப்பு வரை ஸ்மார்ட் வகுப்பறையாக மாற்றும் பணி நவம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும். டிசம்பர்மாதத்துக்குள் 90,000 வகுப்பறைகளில் கரும்பலகைக்குப் பதிலாகஸ்மார்ட்பலகை அமைக்கப்படும்.

இதுவரை ஓலைச்சுவடிகளில், புத்தகங்களில் மட்டுமே படித்த 1,330திருக்குறள்களும், தற்போது 133 தாமிரத் தகடுகளில் பொறிக்கப்பட்டு, இவ்விழாவில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் அனைவரையும் திருக்குறள் படிக்க வைப்பதற்கான ஊக்குவிப்பு நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

விழாவில் மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.சேகர், பொது நூலகஇயக்குநர் பி.குப்புசாமி, சரஸ்வதி மகால் நூலக நிர்வாக அலுவலர் கா.ரோஸ் நிர்மலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர், கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவ்விழாவை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய அரசு அமல்படுத்தியுள்ள 5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு முறைக்கு தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு முதல்வர் விதிவிலக்கு அளித்துள்ளார். பொதுமக்கள், கல்வியாளர்களின் கருத்துகளைப் பெற்றும் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு முடிவு எடுக்கும்.

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்புகளுக்கான கணினி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்த வழக்கை விரைந்துமுடிப்பதற்காக அரசு சட்டரீதியிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

வழக்கில் தீர்ப்பு வந்தவுடன், ஏற்கெனவே தேர்வு எழுதியிருப்பவர்களில் இருந்து விரைந்து கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x