Published : 22 Oct 2019 04:20 PM
Last Updated : 22 Oct 2019 04:20 PM
சென்னை
10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கி, பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை மாற்றியமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதற்காக உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு, ஆசிரியர்கள், துறைசார் நிபுணர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என அனைவரின் கருத்துகளும் பெறப்பட்டன. அதை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.
இதன்படி கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டன. அவை ஒப்பீட்டளவில் அதிகப் பாடங்களைக் கொண்டிருப்பதாகவும் தேர்வை எழுத அளிக்கப்படும் கால அவகாசம் போதவில்லை என்றும் குரல்கள் எழுந்தன.
2.30 மணி நேரத் தேர்வை, 3 மணி நேரமாக மாற்ற வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோரும் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் பொதுத் தேர்வுகளுக்குக் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ''புதிய பாடத்திட்டத்தின் காரணமாக மாணவர்கள் தேர்வெழுத கூடுதல் நேரம் தேவைப்பட்டது. இதுதொடர்பாகப் பல்வேறு தரப்பிடம் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
அதன் அடிப்படையில், முதல்வரின் ஒப்புதலோடு நானும் பள்ளிக் கல்வித்துறை செயலரும் பேசி, துறைக்கு அறிவுறுத்தியுள்ளோம். மாணவர்கள் தேர்வு எழுத 3 மணி நேர அவகாசம் இனி வழங்கப்படும்.
இந்தக் கல்வியாண்டில் இருந்தே 3 மணிநேரத் தேர்வு நடைமுறை அமலுக்கு வரும். இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகளை வெளியிட, துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT