Published : 22 Oct 2019 02:35 PM
Last Updated : 22 Oct 2019 02:35 PM
கரூர்
பரமத்தி அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள் தூய்மைத் தூதுவர்களாக மாறி டெங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. டெங்குவைத் தடுக்கும் விதமாகவும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பள்ளிகள் சார்பில், சில முன்னெடுப்புகள் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில் கரூர் மாவட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இருந்து 10 மாணவர்கள், தூய்மைத் தூதுவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.
தூதுவர்களைக் கொண்டு, பள்ளி வளாகத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைப் பொறுப்பாசிரியரிடம் எடுத்துக் கூறி சரி செய்வது, தங்கள் வீட்டில் தண்ணீர் தேங்காமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பார்த்துக்கொள்வது, ஒவ்வொரு வீதியிலும் இரு மாணவர்கள் இணைந்து அந்த வீதி முழுவதும் உள்ள பொதுமக்களிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி என்பது குறித்த கையேடுகளை வழங்குவது எனத் திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணவர்கள் இன்று பரமத்தி, அறிவொளி நகர் பொது மக்களிடம் பிரச்சாரத்தைத் தொடங்கினர். இந்நிகழ்வில் க.பரமத்தி வட்டாரக் கல்வி அலுவலர் முருகன், பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர், பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவர் தணிகை செல்வி, ஊராட்சி செயலர் வளர்மதி, பள்ளித் தலைமை ஆசிரியர் செல்வகண்ணன், இடைநிலை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT