Published : 22 Oct 2019 09:11 AM
Last Updated : 22 Oct 2019 09:11 AM

தமிழகத்தில் 19 மாவட்டங்களில்  அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்; குற்றாலத்தில் குளிக்க தடை; கொடைக்கானல் வாசஸ்தலம் மூடல் 

சென்னை

தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்ட மலைப் பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அதனால் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. கடந்த இரு நாட்களாக ஒருசில இடங்களில் அதிகனமழை பெய்துள்ளது.

கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், முல்லைப் பெரியாறு அணை, மேட்டூர் அணை ஆகியவற்றுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நான்கு மாவட்டங்களில் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், குற்றாலத்தில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மண்சரிவுபோன்ற ஆபத்து காரணமாக கொடைக்கானல் வாசஸ்தலமும் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும்என்றும் பல மாவட்டங்களில் மிககனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை தலைமை இயக்குநர் எஸ்.பாலசந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

தென் தமிழகம் மற்றும் குமரிக் கடலை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஒட்டியுள்ள பகுதியில் மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அரபிக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுகிறது.

இவை காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். தென் தமிழகமாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். மேலும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கும் மழை நீடிக்கும். இதுதவிர மேற்கு தொடர்ச்சி மலையோரங்களில் உள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப் பகுதிகளில் இன்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 14 செமீ மழையும் குறைந்தபச்சமாக பல்வேறு பகுதிகளில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதி மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு நாளை (இன்று) செல்ல வேண்டாம் என்று மீனவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 112.2 மி.மீ. மழை பெய்திருக்க வேண்டும். இதுவரை 111.8 மிமீ மழை கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x