Published : 22 Oct 2019 06:56 AM
Last Updated : 22 Oct 2019 06:56 AM

கடந்த மக்களவை தேர்தலில் வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்: கேரள மாநிலத்தவர்கள்தான் அதிகம்

புதுடெல்லி:

வெளிநாட்டு குடியுரிமை இல்லாத ஒரு லட்சம் இந்தியர்களில், கடந்த மக்களவை தேர்தலில் 27,000 பேர் மட்டுமே தாயகம் திரும்பி வாக்கு செலுத்து உள்ளனர் என்று இந்திய தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவை தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடந்து முடிந்தது. நாடு முழுவதும் 67.40 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்தது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியிடப்பட்டது. அதன்பின் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்து, நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆனார்.

மக்களவை தேர்தலில் 27,000 வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தாயகம் திரும்பி வாக்கு செலுத்தி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அமெரிக்கா, மலேசியா, துபாய்போன்ற பல்வேறு நாடுகளில் 3.10 கோடி இந்தியர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் 99,807 பேர், இன்னும் அந்நாட்டு குடியுரிமை பெறாமல் பணி விசாவில் உள்ளனர்.

அதனால், அவர்களின் பெயர்கள் மாநில தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் உள்ளன. அவர்களில், ஆண்கள் 91,850, பெண்கள் 7,943 மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 14 பேர் அடங்குவர். இந்நிலையில், மக்களவை தேர்தலில், 25,606 ஆண்களும், 1,148 பெண்களும் என மொத்தம் 26,754 பேர் தாயகம் திரும்பி வாக்கு செலுத்தி உள்ளனர். அதிகப்படியாக கேரளாவை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் 25,091 பேர் தாயகம் திரும்பி வாக்கு செலுத்தி உள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த 85,161 பேர் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், டெல்லியில் 336 பேர் வாக்குசெலுத்தியுள்ளனர். புதுச்சேரியில் 272 பேரும், மேற்குவங்கத்தில் 34 பேரும் வாக்களித்துள்ளனர். பிற மாநிலங்களில் இருந்து 1,021‬ பேர் வாக்களித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x