Published : 21 Oct 2019 11:09 AM
Last Updated : 21 Oct 2019 11:09 AM
புதுடெல்லி
ஜம்மு காஷ்மீர் மக்களிடையே இயல்பு நிலை திரும்பி வருவதை அடுத்து, ஜம்முவில் 100 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர். காஷ்மீரில் மாணவர்களின் வருகைப் பதிவேடு வெறும் 20% ஆக உள்ளது.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ன் படி ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து, அண்மையில் நீக்கப்பட்டது. மாநில அந்தஸ்தும் மாற்றப்பட்டு, யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். டெலிபோன், இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தற்போது இயல்பு நிலை முழுமையாகத் திரும்பிவிட்ட நிலையில், 84 சதவீத மொபைல் போன் சேவைகள் திரும்ப அளிக்கப்பட்டுள்ளன. ஜம்மு மற்றும் காஷ்மீரில் 98 சதவீத பள்ளிகள் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளன.
ஜம்முவில் 100 சதவீத மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பிவிட்ட நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் வெறும் 20.13 சதவீத மாணவர்கள் பள்ளி செல்லத் தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களின் வருகை ஜம்முவில் 100 சதவீதமாகவும் காஷ்மீரில் 86.3 சதவீதமாகவும் உள்ளது.
பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரிக்கும் விதமாக 5 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்று கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT