Published : 21 Oct 2019 09:02 AM
Last Updated : 21 Oct 2019 09:02 AM
மதுரை
தேவையற்ற பொருட்களில் இருந்து பயனுள்ள கலைப் பொருட்களை உருவாக்கிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), பள்ளிக்கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் ‘ரங்கோத்சவ்’ எனும் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் மதுரை ஓசிபிஎம் பள்ளியில் நடைபெற்றது. இதில் 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கார்ட்டூன் போட்டி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு தேவையற்ற பொருட்களிலிருந்து கலைப்பொருட்கள் உருவாக்குதல் போட்டியும் நடந்தது. இதில் மதுரை கல்விமாவட்டத்தைச் சேர்ந்த 100-க்கும்மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று ஓவியம், மற்றும் பொருட்களை உருவாக்கி காட்சிக்கு வைத்திருந்தனர்.
இதில் நடுவர் குழுவினர் பரிசுக்குரியவர்களை தேர்வு செய்தனர். கார்ட்டூன் வரையும் போட்டியில் உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.கிருஷ்ணன் முதலிடம், திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வி.நாகதர்ஷினி 2-ம் இடம், முடுவார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஏ.மீனாட்சி3-ம் பரிசு பெற்றனர். பிளஸ் 1, 2 மாணவர்களுக்கான தேவையற்ற பொருட்களிலிருந்து கலைப் பொருட்கள் உருவாக்குதல் போட்டியில் மணியஞ்சி அரசு பள்ளி மாணவர் எம்.சரவணக்குமார் முதல் பரிசு வென்றார். இவர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவில், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் நீ.திருஞானம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT