Published : 21 Oct 2019 07:57 AM
Last Updated : 21 Oct 2019 07:57 AM

மக்களை அச்சுறுத்தும் டெங்கு

சி.கண்ணன்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இந்த ஆண்டில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது. திருப்பூர், திருவள்ளூர், சென்னையில் தலா ஒருவர் வீதம் மூன்று பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கிறது. கடந்த 2 மாதத்தில் மட்டும் டெங்குவால் 1,500-க்கும் மேற்பட்டோர் பாதிகப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்பால் சிகிச்சைப் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் கொசுவலையுடன் கூடிய படுக்கை வசதி கொண்ட சிறப்பு வார்டில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் குறித்து தெரிந்துக் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்கும்படி தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

அது என்ன டெங்கு காய்ச்சல்?

டெங்கு வைரஸ் கிருமியால் எற்படும் ஒரு வகை காய்ச்சலாகும். நல்ல நீரில் உருவாகும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்கள் டெங்கு வைரசுடன் உருவாகின்றன. இந்த கொசுக்கள் கடிக்கும்போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் கொசு ஆரோக்கியமானவர்களை கடிக்கும் போது, அவர்களுக்கும் டெங்கு பரவுகிறது. ஏடிஎஸ் கொசு பகலில் மட்டுமே மனிதர்களை கடிக்கும் தன்மையுடையது. ஏடிஸ் கொசு மூன்று வாரம் உயிர் வாழும். இந்த மூன்று வார காலத்தில் ஒரு கொசு நல்ல நீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளையிட்டு இனப்பெருக்கம் செய்கிறது.

ரத்த தட்டணுக்கள் குறைந்தால் ஆபத்து

டெங்கு காய்ச்சல் மட்டுமல்லை எந்த ஒரு வைரஸ் காய்ச்சல் வந்தாலும், உடலில் ரத்த தட்டணுக்கள் குறையத் தொடங்கும். டெங்கு காய்ச்சல் என்றால் தட்டணுக்கள் வேகமாக குறையும். ஒருவரின் உடலில் சராசரி ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாகும். சிலருக்கு 3 லட்சம், 4 லட்சம் வரைகூட இருக்கும். ரத்த தட்டணுக்களின் ஆயுட்காலம் அதிகபட்சமாக 5 நாட்களாகும். உடலில் ரத்த தட்டணுக்கள் குறையும்போது, தானாகவே ரத்த தட்டணுக்கள் உற்பத்தியாகிவிடும். டெங்கு காய்ச்சல் வந்தால் வைரஸ் கிருமி, தட்டணுக்களை வேகமாக அழிக்கும். அந்த வேகத்துக்கு தட்டணுக்கள் உற்பத்தி இருக்காது. உடலில் ரத்த தட்டணுக்கள் குறையக் குறைய, உடலுக்குள் ரத்தப்போக்கு அதிகரிக்கும். அந்தநேரத்தில் ஒருவரிடம் இருந்து நேரடியாக ரத்தத்தையோ அல்லது ரத்த தட்டணுக்களை மட்டும் பிரித்தோ டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்றப்படும். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்குக் கீழ் சென்றுவிட்டால், அவர் மிகவும் அபாயக் கட்டத்தில் இருப்பதாக எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எலிசா பரிசோதனை செய்துக் கொள்வதின் மூலம் டெங்கு காய்ச்சல் மற்றும் ரத்த தட்டணுக்களின் விவரத்தை அறிந்துக் கொள்ள முடியும்.

சுத்தமாக இருந்தால் வராமல் தடுக்கலாம்

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உருவாகும் இடங்களை அழிக்க வேண்டும். வீடு, பள்ளி, பொது இடங்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டால் மட்டுமே டெங்கு காய்ச்சலை தடுக்க முடியும்.

தன்னையே வலிமையாக மாற்றிய கொசு

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் முதலில் மழைக்காலத்தில் மட்டுமே உற்பத்தியாயின. அதனால், மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. தற்போது அந்தக் கொசுக்கள் மழை, குளிர் மற்றும் கோடைக்காலத்தில் வாழ்வதற்கு ஏற்பதன்னை வலிமையுள்ளதாக மாற்றிக்கொண்டது. அதனால்தான் கோடைக்காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. மலேரியாவை பரப்பும் அனபிலஸ் கொசுக்களை விரட்டிவிட்டு, அந்த இடங்களை ஏடிஸ் கொசுக்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதனால் மலேரியா பாதிப்பு குறைந்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

ஆண்டுதோறும் செலவு ரூ.6,753 கோடி

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் நோய் பரப்பும் பூச்சிகள் ஆராய்ச்சி மையம் (சிஆர்எம்இ), சர்வதேச மருத்துவ நோயியல் நெட்வொர்க் (ஐஎன்சிஎல்இஎன்) மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகம் இணைந்து இந்தியாவில் கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் வைரஸ் குறித்த ஆராய்ச்சி நடத்தின. குறிப்பாக, டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த ஆராய்ச்சியை நடத்தியதில், இந்தியாவில் ஆண்டுதோறும் டெங்கு காய்ச்சலுக்கு அரசு செலவிடுவது, பொதுமக்கள் தனியார் மருத்துவமனைகளில் செய்யும் செலவு, மருந்து மற்றும் மாத்திரைகளை வாங்குவது என மொத்தம் ரூ.6,753 கோடியாக உள்ளது தெரியவந்துள்ளது. இந்தத் தொகை ஆண்டுதோறும் விண்வெளி ஆராய்ச்சிக்கு செலவிடும் தொகை அளவுக்கு, டெங்கு காய்ச்சலுக்கு அதிக அளவில் செலவாகிறது.

சுத்தமான நீர்தான் டெங்கு கொசுவுக்கு பிடிக்கும்

டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகக் கூடியது. அதனால், திறந்தவெளியில் சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், வாளி, டயர்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால், குடியிருப்பு வளாகங்கள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், பள்ளிகள், கடைகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், குடியிருப்பு பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தி யாகும் சூழல் இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. கொசுக்களின் உற்பத்திக்கு காரணமாக தேவையில்லாத பொருட்களை அகற்றி தூய்மையாக வைத்துக் கொள்வது நல்லது.

உடனடி சிகிச்சை முக்கியம்

டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவ சிகிச்சையை உடனடியாகப் பெற வேண்டும். தாமாகவே கடைகளுக்கு சென்று மருந்துகள் வாங்கி உட்கொண்டால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும். டாக்டரிடம் ஊசி போட்டுக் கொள்ளக் கூடாது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், முறையான கவனிப்பும் கொடுத்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம். டெங்கு காய்ச்சல் உடலில் நீர் சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர், மருத்துவமனையில் கொடுக்கப்படும் உயிர் காக்கும் ஓஆர்எஸ் கரைசல் போன்ற நீராகாரம் தேவையான அளவு கொடுக்க வேண்டும். காய்ச்சல் நின்ற பின்னர் 3 நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ டாக்டரிடம் செல்ல வேண்டும்.

மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை

மாணவர்கள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக உணவு உட்கொள்வதற்கு முன்பு, கைகளை கட்டாயம் கழுவ வேண்டும். வகுப்பறைகளை சுத்தமாக வைக்க வேண்டும். வகுப்பறை மற்றும் கழிவறைகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். பள்ளிகளில் காலை நடக்கும் இறை வணக்கக் கூட்டத்தில் டெங்குகாய்ச்சல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்க வேண்டும். குடிநீர் தொட்டிகள் மற்றும் பானைகளை மூடி வைத்து பயன்படுத்துவதன் மூலம் காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடியும். நாட்டுநலப் பணித் திட்டம், சாரண,சாரணியர், தேசிய மாணவர் படை, பசுமைப் படை மற்றும் இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களை சுகாதாரத் தூதுவர்களாக்கி பள்ளியை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு டெங்குகாய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குச் சென்று பரிசோதனை செய்து கொள்ள தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். காய்ச்சல் பாதிப்போடு மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், பள்ளிக்கு வந்த பின்னர் காய்ச்சல் ஏற்பட்டாலோ வகுப்பு ஆசிரியர்கள் கேட்டறிந்து பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு தெரிவித்து, மாணவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

டெங்கு வைரஸ் ரத்த தட்டு அணுக்களை அழித்துவிடும் தன்மையுடையது. ரத்த தட்டுகள் எண்ணிக்கை குறையும்போது நுரையீரல், வயிறு, பல் ஈறு, சிறுநீர் பாதையில் ரத்த கசிவு ஏற்படும்.

பாதிப்பின் அறிகுறிகள்

*காய்ச்சல்

*சோர்வு

*தலைவலி

*உடல் வலி

*வாந்தி

*எலும்பு வலி

1) அலோபதி மருத்துவத்தில் (ஆங்கில மருத்துவம்) டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், சித்த மருந்தான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு உதவியுடன் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு உட்பட எந்த வகையான வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும், காய்ச்சல் வந்த முதல் நாளே நிலவேம்பு குடிநீரை பருக தொடங்கிவிட வேண்டும். இதன் மூலம் வைரஸ் வீரியம் குறைந்துவிடும். ஒரு வாரம் இருக்கும் காய்ச்சல், 3 நாட்களில் குணமாகிவிடும்.

2) அலோபதி மருத்துவத்தில் (ஆங்கில மருத்துவம்) டெங்கு காய்ச்சலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், சித்த மருந்தான நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு உதவியுடன் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. டெங்கு உட்பட எந்த வகையான வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும், காய்ச்சல் வந்த முதல் நாளே நிலவேம்பு குடிநீரை பருக தொடங்கிவிட வேண்டும். இதன் மூலம் வைரஸ் வீரியம் குறைந்துவிடும். ஒரு வாரம் இருக்கும் காய்ச்சல், 3 நாட்களில் குணமாகிவிடும்.

3) தினமும் காலை, மாலையில் அருந்த வேண்டும். ஒவ்வொரு முறையும் புதிதாக தயாரித்து அருந்த வேண்டும். இதன்மூலம் காய்ச்சல் 5 நாட்களில் குணமாகிவிடும். காய்ச்சல் குறைந்த பின்னரும், மேலும் 2 நாட்களுக்கு நிலவேம்பு குடிநீரை அருந்த வேண்டும்.

4) நிலவேம்பு குடிநீர் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதேபோல் புதிதாக பறித்த பப்பாளி இலைகளில் உள்ள காம்புகளை அகற்றிவிட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து அல்லது இடித்து வடிகட்டி 10 மிலி வீதம் தினமும் 4 முறை அருந்த வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x