Published : 16 Oct 2019 07:18 AM
Last Updated : 16 Oct 2019 07:18 AM
மணிலா
உடனடி நூடுல்ஸ் போன்ற உணவு வகையால், ஆசிய குழந்தைகள் பெரும் ஆபத்தை சந்தித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகின்றன. ஆனால், அந்நாட்டு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலன் மீது அக்கறை செலுத்த நேரம் இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்த 3 நாடுகளில் உள்ள 40 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுடன் உள்ளதாக, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நல அமைப்பான குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) கவலை தெரிவித்துள்ளது. உலகளவில் 3-ல் ஒரு குழந்தைக்கு ஊட்டச் சத்து குறைபாடு இருப்பதாகவும் யுனிசெப் கூறியுள்ளது.
இந்தோனேசியாவின் பொது சுகாதார நிபுணர் ஹஸ்புல்லா தப்ரானி கூறுகையில், “குழந்தைகள் வயிறு நிறைந்தால் போதும் என்றே பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள், அதில் அவர்களுக்கு தேவையான புரோட்டின், கால்சியம் உள்ளதா என்று யாரும் கவலைப்படுவதில்லை ” என்றார் ஆதங்கத்துடன்.
இதுகுறித்து யுனிசெப் கூறுகையில், “இரும்பு சத்து குறைபாட்டால், குழந்தைகளுக்கு கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது. குழந்தை பருவத்தில் கிடைக்க வேண்டிய பல ஊட்டச்சத்துகள் குழந்தைகளுக்கு கிடைக்காததால், குழந்தை பருவ இறப்பு அதிகமாகிறது” என்று தெரிவித்துள்ளது.
ஊட்டச்சத்து குறைபாட்டால் இந்தோனேசியாவில் 2.44 கோடி, பிலிப்பைன்ஸில் 1.1 கோடி, மலேசியாவில் 26 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 3 நாடுகளில் நூடுல்ஸ் உணவு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. அதை உண்ணும் குழந்தைகளுக்கு சரியாக ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று யுனிசெப் அறிக்கை கூறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT