Published : 15 Oct 2019 08:01 AM
Last Updated : 15 Oct 2019 08:01 AM

துளிர் வினாடி வினா-போட்டியில் ராமேசுவரம் தீவு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

துளிர் வினாடி-வினா போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகள்.

ராமேசுவரம்

பள்ளி மாணவர்களுக்கு இடையே அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் 1989-ம் ஆண்டு முதல் துளிர் வினாடி-வினா போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான வட்டார அளவிலான போட்டி ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆசிரியர் சந்தான வேலு தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்தார். அறிவியல் ஆசிரியர் பாலமுருகன் வரவேற்றார்.

3 நிலைகளில் போட்டி

துளிர் வினாடி-வினா போட்டிக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சசிக்குமார் போட்டிக்கான விதிமுறைகளை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இப்போட்டியில் ராமேசுவரம் தீவு அளவில் 15 பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். போட்டியானது மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டு 6,7,8 வகுப்புகள் ஜூனியர் பிரிவாகவும், 9,10 வகுப்புகள் சீனியர் பிரிவாகவும், 11,12 வகுப்புகள் சூப்பர் சீனியர் என்ற நிலையில் ஒரு பிரிவுக்கு மூன்று மாணவர்கள் வீதம் கலந்து கொண்டனர்.

துளிர் வினாடி-வினா போட்டியில் ஜூனியர் பிரிவில் கரையூர் அரசு உயர்நிலைப் பள்ளி, சீனியர் பிரிவில் பாம்பன் அரசு மேல்நிலைப் பள்ளி, சூப்பர் சீனியர் பிரிவில் ராமேசுவரம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகள் முதலிடம் பெற்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பள்ளிகளின் மாணவ, மாணவிகளுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மாவட்ட போட்டிக்கு தேர்வு

ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் பிரிவில் முதல் இடம் பெற்ற மாணவர்கள் அக்.16-ம் தேதி ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். போட்டிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டார துணை செயலாளர் ஜெரோம் ஆசிரியர் நடத்தினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டாரச் செயலாளர் சசிக்குமார் செய்திருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x