Published : 15 Oct 2019 07:13 AM
Last Updated : 15 Oct 2019 07:13 AM

சீன மொழியில் திருக்குறளை மொழிபெயர்க்க காரணமான கலாம்

ராமேசுவரம்

தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர் யூசி. ஆங்கிலத்தில் கவிதை, நாவல்கள் எழுதுவதில் வல்லவர். இயற்கை, சுற்றுச்சூழல் பிரச்சினை பற்றியும் எழுதி இருக்கிறார். கடந்த 2010-ம் ஆண்டு கவிஞர் யூசிக்கு, சென்னையில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில், அப்துல் கலாம், கவிஞர் யூசியிடம் 2200 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தில் பிறந்து, உலக திருமறையை வழங்கிய திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் ஆங்கில மொழி பெயர்ப்பை வழங்கியுள்ளேன். இதனை தாங்கள் மாண்ட்ரின் மொழியில் மொழி பெயர்க்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். நண்பர் கலாம் சொன்னதால் அவர் திருக்குறளின் பல்வேறு ஆங்கில உரை நடைகளை ஆழ்ந்து படித்தார்.

நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றியும், எக்காலத்துக்கும் பொருந்தும் வகையிலும் குறள்கள் அமைந்திருப்பதை கவிஞர் யூசி உணர்ந்தார். இது மாண்ட்ரின் மொழி பேசும் மக்கள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்று திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

கடந்த 2.12.2010 அன்று தைவான் நாட்டின் தலைநகரம், தைபேயில் நடைபெற்ற 30-வது உலக கவிஞர்கள் மாநாட்டில் அப்துல்கலாம் முன்னிலையில், கவிஞர் யூசி திருக்குறளின் மாண்ட்ரின் மொழி பெயர்ப்புகளில் சிலவற்றை வாசித்துக் காட்டினார். இதனை அங்கிருந்த அத்தனை உலக கவிஞர்களும், அறிஞர்களும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

- எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x