Published : 14 Oct 2019 10:38 AM
Last Updated : 14 Oct 2019 10:38 AM

மேற்குவங்க முதல்வர் மம்தாவின் முயற்சியால் பெண்களுக்காக தனிப் பல்கலைக்கழகம்

கொல்கத்தா

பெண்களின் முன்னேற்றத்துக்காக மேற்குவங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி, பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், பெண்களுக்கு 18 வயது நிரம்பும் முன் திருமணம் செய்ய கூடாது என்பதற்காக ‘கன்யாஸ்ரீ’ என்ற திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கினார். இதன் ஒரு பகுதியாக பெண் கல்வியை உறுதி செய்ய, "கன்யாஸ்ரீ பல்கலைக்கழகம்" தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த பல்கலைக்கழகம் முழுக்க முழுக்க பெண்களுக்கு மட்டும். அதற்காக ரூ.7,000 கோடியை ஒதுக்கி உள்ளார் முதல்வர் மம்தா. கன்யாஸ்ரீ பல்கலைக்கழகம் நாடியா மாவட்டத்தில் கிருஷ்ணாநகரில் அமைய உள்ளது. இதற்காக புதிய கட்டிடத்துக்கு, கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணா நகரில், மம்தா அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், உலக பெண் குழந்தைகள் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் மம்தா கூறும்போது, “பெண்களின் வளர்ச்சிக்காக தொடங்கப்படும் கன்யஸ்ரீ திட்டத்துக்கு, சிறந்த திட்டத்துக்கான ஐ.நா. சபையின் விருது 2017-ம் ஆண்டு கிடைத்தது. நாடியாவில் தொடங்கப்படவுள்ள கன்யாஸ்ரீ பல்கலைக்கழகம் போல், எல்லா மாவட்டத்திலும் கன்யா கல்லூரிகள் தொடங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x