Published : 14 Oct 2019 09:00 AM
Last Updated : 14 Oct 2019 09:00 AM
ராமநாதபுரம்
உலகில் 8 லட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன. உலகிலேயே அதிக தபால் நிலையங்களைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது. ஏறக்குறைய 1.5 லட்சம் தபால் நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அக்.9-ம் தேதி உலக அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் அக்டோபர் 9 முதல் 15–ம் தேதி வரை ஒரு வாரத்துக்கு தேசிய தபால் வாரமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்த ஒரு வாரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ராமநாதபுரம் தலைமை தபால் நிலையம் சார்பாக உலக அஞ்சல் தினம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட அஞ்சலகக் கண்காணிப்பாளர் மாரியப்பன் தலைமை வகித்தார்.
அப்போது பதிவு தபால், விரைவு தபால், மணி ஆர்டர், சேமிப்புக் கணக்கு உட்பட பல்வேறு சேவைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விளக்கப்பட்டது.மேலும் அஞ்சல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைவாய்ப்பு பதிவு செய்தல், பொன்மகள் சேமிப்புத் திட்டம், வங்கி சேமிப்புக் கணக்கு, தங்கப் பத்திரம் விற்பனை ஆகிய சேவைகள் குறித்தும் விளக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவ, மாணவிகளிடையே அஞ்சல் துறை தொடர்பான வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாவட்டத்தில் இருந்து ஏழு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரம் செய்யது அம்மாள்மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த சூரியப் பிரசன்னா, கௌசன், ராமநாதபுரம் இன்பெண்ட் மெட்ரிக். பள்ளியைச் சேர்ந்த சுபிக்ஷா, லிரானா, பரமக்குடி யாதவா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த யுவ, அர்ச்சனா ஆகிய மாணவர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT