Published : 14 Oct 2019 06:55 AM
Last Updated : 14 Oct 2019 06:55 AM

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 17- ம் தேதி தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 17-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய துணை தலைமை இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தென்மேற்கு பருவமழை வடக்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகி வருகிறது. அதனைத் தொடர்ந்து தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழடுக்கில் கிழக்கு திசைக் காற்று வீசத் தொடங்கியுள்ளது. இது அடுத்த சில தினங்களில் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 17-ம் தேதியை ஒட்டி தொடங்க வாய்ப்புள்ளது. தமிழகத்தில் வழக்கமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரி அளவாக 44 செ.மீ. மழை கிடைக்கும்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையால் தமிழகம் மட்டுமல்லாது, தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, உள் கர்நாடகம் மற்றும் கேரளா பகுதிகளும் மழை பெறும்.

அடுத்த இரு நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், மதுரை, சேலம், திண்டுக்கல், தஞ்சாவூர், சிவகங்கை, விருதுநகர் ஆகிய
மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x