Published : 11 Oct 2019 09:04 AM
Last Updated : 11 Oct 2019 09:04 AM

அரசு பள்ளிகளுக்கு இணைய வசதி ஆசிரியர்கள், மாணவர்கள் எதிர்பார்ப்பு

கோவை

கியூஆர் கோடு உதவியுடன் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வகையிலும், ஆசிரியர்கள் பயோமெட்ரிக் கருவி மூலம் தடையின்றி வருகையைப் பதிவு செய்யும் வகையிலும் அரசு பள்ளிகளுக்கு இணைய வசதிவழங்கப்படுமா? என்று எதிர் பார்க்கின்றனர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்.

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைக்கப்பட்ட தொடுவுணர் கருவி மூலமாக வருகைப் பதிவேடு பராமரிக்கும் முறையை (AEBAS - Adhar enabled Biometric System) பிரிவு அமல்படுத்தும் வகையில்,செப்டம்பர் 24-ம் தேதி பள்ளிகல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் மற்றும் தேசியதகவலியல் மைய இயக்குநர் தலைமையில் கூட்டம் காணொலிகாட்சி வழியாக நடைபெற்றது.

இதில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். அப்போது தொடுவுணர் கருவிகள் மூலமாக ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களின் வருகைப் பதிவை கையாளும் வகையில், அவர்களின் விவரங்களை பராமரிக்கும் பிரிவு அலுவலர் களின் விவரங்களை பட்டியலிட்டு அனுப்ப உத்தரவு பிறக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு,அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு கடந்த அக்.4-ம் தேதி அமலுக்கு வந்தது. இதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் அமல்படுத்தப்பட்ட பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை, இணைய இணைப்பின்றி பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர், ஆசிரியர்கள்.

இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோவை மாவட்ட செயலர் சி.அரசு கூறும்போது, 'தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பயோ-மெட்ரிக் வருகைப்பதிவு முறை கடந்த ஜூன் மாதம் நடைமுறைக்கு வந்தது.

அதன்தொடர்ச்சியாக தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் கடந்த அக்டோபர் 4-ம் தேதி இம்முறை அமலுக்கு வந்தது. இக்கருவியில் காலை மற்றும் மாலை என இருவேளைகளில் வருகையைப் பதிவு செய்ய வேண்டும். தகவல் பரிமாற்றத்துக்கு இக்கருவியில் இணைய வசதி தேவைப்படுகிறது. தற்போது பள்ளிகளில் இணைய வசதி இல்லாததால் ஆசிரியர்கள் வருகையைப் பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சில பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு வைத்திருக்கும் இணைய இணைப்பையே, பயோமெட்ரிக் கருவியை இயங்குவதற்கும் பகிர்ந்து வருகின்றனர்.

பாடப்புத்தகங்களில் கியூஆர் கோடு உதவியுடன் மாணவர்களுக்கு வகுப்பு நடத்துவதற்கும் இணைய வசதி தேவைப்படுகிறது. மலைப்பகுதியில் உள்ள சில பள்ளிகளில் இன்னும் இணைய வசதி ஏற்படுத்தப்படாமல் உள்ளது. இணைய வசதி இன்றியமையாததாக மாறிவிட்ட இன்றைய சூழலில், அனைத்து பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் மற்றும் அலுவலக கோப்புகளை பராமரித்தல் போன்றவற்றிற்கு இணையதள வசதியை ஏற்படுத்திக் கொடுக்க பள்ளி கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

- த.சத்தியசீலன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x