Published : 10 Oct 2019 01:28 PM
Last Updated : 10 Oct 2019 01:28 PM

சீன அதிபருக்கு வரவேற்பு: சென்னை பள்ளி மாணவர்கள் தயார்

கோப்புப்படம்: ம.பிரபு

சென்னை

சீன அதிபரை வரவேற்கும் நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும் இடம் பெறுகின்றனர்.

இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்த சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடி இடையே அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய நாட்களில் தமிழகத்தில் உள்ள மாமல்லபுரத்தில் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இது தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பது மட்டுமின்றி, தமிழகத்தின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தியுள்ளது.

இரு நாட்டுத் தலைவர்களின் வருகையை ஒட்டி, மாமல்லபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்குள்ள கலைச்சின்னங்கள் அனைத்தும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சீன அதிபரை வரவேற்க உள்ள பள்ளி மாணவர்களின் பட்டியல் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகி உள்ளது. அந்தப் பட்டியலின்படி, மாமல்லபுரத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 250 முதல் 1000 மாணவர்கள் வரை, அதிபரை வரவேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் 5 பேருந்துகள் அனுப்பப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் மொத்தம் 5,750 பேர், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்க உள்ளனர்.

விமான நிலையத்துக்கு இடது புறத்தில் உள்ள வரவேற்புப் பகுதி, மாமல்லபுரம் செல்லும் வழியில் உள்ள சுங்கச் சாவடிகள், ஓட்டல், மாமல்லபுரம் நகரப் பஞ்சாயத்து அலுவலகம், அதிபர் தங்கும் விடுதிக்குச் செல்லும் வழிகள் ஆகிய இடங்களில் அதிபர் ஜி ஜின் பிங்குக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வை ஒருங்கிணைக்க, மாவட்டக் கல்வி அதிகாரிகள் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் இதுதொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சேலையூர், நங்கநல்லூர், முட்டுக்காடு, கொட்டிவாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகள் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x