Published : 10 Oct 2019 12:28 PM
Last Updated : 10 Oct 2019 12:28 PM

உலக சிலம்பாட்டப் போட்டியில் கோவை மாணவர்கள் 8 பதக்கங்கள் வென்றனர்

கோவை

உலக நாடுகளுக்கு இடையிலான சிலம்பாட்டப் போட்டி, மலேசியாவில் உள்ள பினாங்கு மாநிலத்தில் அக். 2 முதல் 6 வரை நடைபெற்றது. ஒற்றைச் சிலம்பம், இரட்டைச் சிலம்பம், ஒற்றைச் சுருள் வீச்சு, இரட்டைச் சுருள் வீச்சு, மான்கொம்பு வீச்சு, கம்படிபாடம், வாள்வீச்சு, குழு கம்பு சண்டை உள்ளிட்ட 9 பிரிவுகளில் போட்டி நடைபெற்றது.

இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் கோவையில் இருந்து கலந்து கொண்ட பள்ளி மாணவர்கள் 8 பதக்கங்கள் வென்றனர். ஜூனியர் மாணவர் பிரிவில் ஏ.எல்.ஜி. மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர் கிருஷ்ணகுமார் சுருள்வாள் வீச்சு போட்டியில் தங்கம், குழு கம்பு சண்டை
போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவிகள் பிரிவில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி பூஜா மான்கொம்பு சண்டையில் தங்கம், கம்பு சண்டையில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

சப்-ஜூனியர் மாணவர் பிரிவில் கார்மல் கார்டன் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் மான்கொம்பு, கம்பு சண்டை போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களையும் மாணவிகள் பிரிவில் ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி மேரி பிரியதர்ஷினி சுருள்வாள் வீச்சில் தங்கப்பதக்கமும் மினி சப்-ஜூனியர் பிரிவில் எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவர் ஸ்ரீவர்ஷன் கம்பு சண்டை பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றனர். இவர்கள் சிலம்பாலயா அறக்கட்டளையில் பி.செல்வகுமார், ரஞ்சித்குமார் ஆகியோரிடம் பயிற்சி பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x