Published : 10 Oct 2019 10:56 AM
Last Updated : 10 Oct 2019 10:56 AM

பொறியியல் கல்லூரிகளில் வருகைப் பதிவு குறைந்த மாணவர்களும் தேர்வு எழுதலாம்

- புதுடெல்லி

பொறியியல் கல்வி நிலையங்களில் குறைந்த வருகைப்பதிவு கொண்ட மாணவர்களும் இனி இறுதி தேர்வு எழுதஅனுமதிக்கப்பட உள்ளனர். இதுதொடர்பான உத்தரவை அனைத்து பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து தொழில் கல்வி நிலையங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் தமது இறுதித் தேர்வை எழுத குறிப்பிட்ட வருகைப்பதிவு அவசியம். இந்த நாட்களை முழுமைப்படுத்தாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவதில்லை.

இந்நிலையை மாற்றி வருகைப்பதிவு குறைவாக உள்ள மாணவர்களையும் தேர்வு எழுத மத்திய அரசு அனுமதிக்க உள்ளது. இதற்கான உத்தரவை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) நாட்டில் உள்ள அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்ப உள்ளது.

இதன்படி, கல்விக்காலங்களில் தொழில்முனைவோராக விரும்புவோர், ’ஸ்டார்ட் அப்’ தொழிலுக்கு முயல்வோர், புதிய தொழிலுக்கான ஆய்வு செய்வோர் போன்ற மாணவர்கள் குறைந்த அளவு வருகைப்பதிவு வைத்திருந்தாலும் அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட உள்ளனர். இதனால், கல்விக்கு பின் வேலை தேடுபவர்கள் என்ற நிலை மாறி, வேலை அளிப்பவர்கள் என்றாகி விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் மதிப்பெண்தொழில் முனைவோர் மாணவர்களுக்காக தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண் வழங்கவும் வகை செய்யப்பட உள்ளது. இதுபோன்ற தொழில் வளர்ப்புக்கான சூழலை பொறியியல் கல்வி நிறுவனங்கள் தம் வளாகத்திலேயே ஏற்படுத்தியும் தரலாம் எனவும் ஏஐசிடிஇ கூறுகிறது.

இதில் தரமான மாணவர்கள் தொழில் துவங்க தேவையான நிதியை பெற அவர்களின் கல்வி நிறுவனங்களும் உதவலாம் எனவும், வெளியில் உள்ள தொழில் நிறுவனங்களிடம் பேசியும் அந்த மாணவர்களுக்கு தொடர்புகளை ஏற்படுத்தலாம் என்றும் ஏஐசிடிஇ பரிந்துரைக்க உள்ளது.

உயர்கல்வி ஆய்வுகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் தகவல் கடந்த வாரம் வெளியானதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையில் கடந்தவாரம் தனது அதிகாரிகளுடன் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ்பொக்ரியால் ஆய்வு செய்திருந்தார்.

இதில், ஏஐசிடிஇ சார்பில் அளிக்கப்பட்ட இந்த பரிந்துரைகள் ஏற்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, மாணவர்களுக்காக அமைச்சகம் சார்பில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொண்டு தேசியஅளவில் அளித்த புதிய கண்டு பிடிப்புகளில் 70 சிறந்த மாணவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். எனவே, தற்போதைய புதிய முடிவினாலும் மாணவர்கள் இடையே இருக்கும் தொழில் திறன் வளர்வதுடன் அவர்கள் உகந்த கல்விக்கான பட்டங்களையும் தவறாமல் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x