Published : 10 Oct 2019 09:09 AM
Last Updated : 10 Oct 2019 09:09 AM
கரூர்
விஜயதசமியையொட்டி, கரூரில் ஓவிய ஆசிரியர், தனது பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களை பயன்படுத்தி சரஸ்வதிக்கு கோயில் அமைத்துள்ளார்.
கரூர் ஸ்ரீ சங்கர வித்யாலயா பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிபவர் தங்க.கார்த்திகேயன்(38). இவர், சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு பள்ளி நூலகத்தில் உள்ள புத்தகங்களைப் பயன்படுத்தி சரஸ்வதிக்கு கோயில் அமைத்துள்ளார்.
சரஸ்வதி பூஜை, விஜயதசமி ஆகிய 2 நாட்களும் இந்த புத்தகக் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதுகுறித்து ஓவிய ஆசிரியர் தங்க.கார்த்திகேயன் கூறியதாவது:ஒவ்வொரு பண்டிகையையும், அதுசார்ந்த பொருட்களை பயன்படுத்தி கொண்டாடவேண்டும் என்ற விருப்பத்தால் பொங்கல் பண்டிகைக்கு பானை, கரும்பு, வெல்லம் ஆகியவற்றை பயன்படுத்தி படைப்பை உருவாக்கினேன். ஆசிரியர் தினத்தையொட்டி சாக்பீஸால் டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவம் வரைந்திருந்தேன்.
‘கலர்ஸ் டே’வையொட்டி ஊசி முனையில் வண்ண நூல்களை பயன்படுத்தி ‘கலர்ஸ்டே’ என்ற வார்த்தையை உருவாக்கினேன். இவை பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றதால்,சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியையொட்டி நூல்களை பயன்படுத்தி பள்ளியில் சரஸ்வதிக்கு கோயில் அமைக்க திட்டமிட்டேன்.
1,300 நூல்கள்இதற்காக பள்ளி நூலகத்திலிருந்த 1,300 நூல்களை பயன்படுத்தி புத்தகத்தின் அளவு, எடை, கோணம் ஆகியவற்றை அளவிட்டு, அவை சரிந்து விடாத வகையில் விசிறி முறையில் 3 அடி உயரமுள்ள 4 தூண்கள், அதற்கு மேல் தலா முக்கால் அடியில் 3 நிலைகள், பழைய புத்தகங்ளை வெட்டி கலசம் ஆகியவற்றைக் கொண்டு சக ஆசிரியர்கள் உதவியுடன் உருவாக்கினேன்.
உயிரெழுத்து மற்றும் ஆயுத எழுத்துஇதற்கு பசையோ அல்லது வேறு எந்தப் பொருட்களையுமோ பயன்படுத்தவில்லை. கோயிலின் முகப்பு பகுதியில் ‘அ’ முதல்ஆயுத எழுத்து வரையிலான உயிரெழுத்து மற்றும் ஆயுத எழுத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகள் நாளை(இன்று) பள்ளிக்கு வரும்போது அவர்களுக்கு இந்த புத்தகக் கோயில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
- க.ராதாகிருஷ்ணன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT