Published : 09 Oct 2019 10:54 AM
Last Updated : 09 Oct 2019 10:54 AM
திருச்சி
அரசுப் பள்ளிகளில் காலாண்டுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், முதல் பருவத்துக்குரிய புத்தகங்களை மாணவர்களிடமிருந்து திரும்பப் பெற்று புத்தக வங்கிகளில் வைத்து பராமரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் இலவச பாடப்புத்தங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஆண்டுக்கு சுமார் 8 கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகின்றன.
இதற்கிடையே, பள்ளிகளில் புத்தக பயன்பாட்டை குறைக்கும் வண்ணம் அனைத்து மாநிலங்களும் தேவையான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, அனைத்து அரசு பள்ளிகளிலும் புத்தக வங்கிகள் தொடங்கவும், முறையாக பராமரிக்கவும் பள்ளித் தலைமையாசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளிடமிருந்து முதல் பருவத்துக் குரிய புத்தகங்களை சேகரித்து புத்தக வங்கிகளில் வைத்து பராமரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், நடப்பு கல்வியாண்டில் காலாண்டுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், முதல் பருவத்துக்குரிய அனைத்து வகுப்புகளுக்குரிய, மீண்டும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் உள்ள அனைத்துப் பாடப்புத்தகங்களையும் சேகரித்து புத்தக வங்கியில் வகுப்பு மற்றும் பாடவாரியாக தொகுத்து பாதுகாக்குமாறு அனைத்துப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதில், 9, 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பருவத்தேர்வு முறை இல்லை என்பதால், 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளிடமிருந்து மட்டும் புத்தகங்கள் திரும்ப பெறப்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT