Published : 09 Oct 2019 08:25 AM
Last Updated : 09 Oct 2019 08:25 AM

இந்தியாவுக்குள் தாக்குதல் நடத்துவதற்காக எல்லைப் பகுதியில் 20 பயங்கரவாத முகாம்கள்: ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை

புதுடெல்லி

எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் 20 பயங்கரவாத முகாம்கள், 20 தாக்குதல் மையங்களை பாகிஸ்தான்
தொடங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதுகுறித்து இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் நேற்று கூறியதாவது:

கடந்த பிப்ரவரியில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்பு நடந்த புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக இந்திய விமானப்படை பாலகோட் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தானால் இயக்கப்பட்டு வந்த பயங்கரவாத முகாம்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் மீண்டும் அந்த பயங்கரவாத முகாம்களையும், தாக்குதல் மையங்களையும் பாகிஸ்தான் தொடங்கியுள்ளது. இந்த மையங்கள், முகாம்கள் ஒவ்வொன்றிலும் தலா 50 பயங்கரவாதிகள் தங்கி உள்ளனர். ஒரு பகுதியில் தாக்குதல் நடத்திவிட்டு இந்திய ராணு வத்தினரை திசைதிருப்பி இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்வதே இந்த பயங்கரவாத முகாம்களின் நோக்கமாகும். ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் இந்தியா மீது தாக்குதல் எண்ணத்தில் செயல்பட்டு வருகின்றன.

ஆனால் பெரிய அளவில் தாக்குதலை நடத்த முடியாததால் பாகிஸ்தான் பயங்கவாதிகள் ஊடுருவ முயற்சி செய்து வருகின்றனர் என்று புலனாய்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் ஊடுருவுவதற்கு அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் கூறும்போது, “200 முதல் 300 தீவிரவாதிகள் வரை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் காத்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை அவ்வப்போது கூடவும், குறையவும் செய்வதாகத் தெரியவந்துள்ளது.

குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக இந்தியாவுக்குள் ஊடுருவ அவர்கள் காத்திருக்கின்றனர். சமீபகாலமாக ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் அடிக்கடி தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. குறிப்பாக கனாசக், ஆர்.எஸ்.புரா, ஹிரா நகர், பூஞ்ச், ரஜவுரி, உரி, நம்ப்ளா, கமா, கெரன் பகுதிகளில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. லஷ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய தீவிரவாத அமைப்புகளின் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவக் காத்திருக்கின்றனர். இவர்கள் அண்மையில் நடத்திய கூட்டத்தின் போது இந்திய பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதலை அதிகரிக்கவும் முடிவு செய்திருப்பதாகத் தெரியவந்துள்ளது” என்றார்.

- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x