சுற்றுலா மையமாகுமா கூழையாறு கடற்கரை?

சுற்றுலா மையமாகுமா கூழையாறு கடற்கரை?
Updated on
2 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் நவக்கிரகத் தலங்கள் மற்றும் புகழ் பெற்ற கோயில்கள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை, பூம்புகார் கலைக்கூடம் உள்ளிட்ட இடங்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில், இயற்கை எழில் கொஞ்சும் கூழையாறு கடற்கரையை சுற்றுலா மையமாக மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட வேட்டங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள கூழையாறு கடற்கரை, இயற்கை அழகுடன் காட்சியளித்து வருகிறது. இப்பகுதியில் பரந்தளவில் சவுக்குமரக் காடுகள் காணப்படுகின்றன.

மேலும், கடற்கரைப் பகுதியில் கருங்கல் தடுப்புகள் அமைக்கப்படாததால், இயற்கையான கடல் தோற்றம் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனால், இயற்கைச் சூழலை ரசிக்க விரும்பும் பொதுமக்கள் நாள்தோறும் அதிகளவில் இங்கு வரத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், கடற்கரையில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதது பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மின்விளக்கு வசதி, குடிநீர் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை இல்லாததால், இரவு நேரங்களில் சமூக விரோதிகளால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் இருப்பதால், குடும்பத்துடன் வர விரும்பும் பலர் தயக்கம் காட்டுகின்றனர்.

சீர்காழி, கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கு அருகிலுள்ள கடற்கரையாக கூழையாறு கடற்கரை அமைந்துள்ளது.

எனவே, இதை சுற்றுலா மையமாக அறிவித்து மேம்படுத்தினால், உள்ளூர் மக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் இயற்கைச் சுற்றுலா வாய்ப்பு கிடைப்பதுடன், அரசுக்கும் வருவாய் ஈட்டும் வாய்ப்பு உருவாகும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து கொள்ளிடத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஆர்.பிரபு ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: பூம்புகார், தரங்கம்பாடி கடற்கரைகள் சுற்றுலா மையங்களாக பராமரிக்கப்பட்டு வருகின்றன.

அங்கு கடல் அரிப்பைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்புக்காகவும் கருங்கல் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், கடலில் இறங்கி குளிக்க விரும்புவோர் நீண்ட தூரம் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

<div class="paragraphs"><p>கூழையாறு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமர கட்டப்பட்டுள்ள காத்திருப்பு கூடம்.</p></div>

கூழையாறு கடற்கரையில் சுற்றுலா பயணிகள் அமர கட்டப்பட்டுள்ள காத்திருப்பு கூடம்.

ஆனால், கூழையாறு கடற்கரை இயற்கை அழகுடன் காணப்படுவதால், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், இயற்கை சூழலைரசிக்கவும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

கடந்த 2021-22-ம் நிதியாண்டில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் காத்திருப்போர் கூடம் அமைக்கப்பட்டது. மேலும், குளியலறை, கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், அவை முறையாக பராமரிக்கப்படாததால் தற்போது பயன்பாட்டில் இல்லை.

எனவே, கூழையாறு கடற்கரையை சுற்றுலா மையமாக அறிவித்து, மின்விளக்கு, குடிநீர் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். பூங்கா, பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட்டால், சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும். மேலும், கூழையாறு மற்றும் திருமுல்லை வாசல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு சிறு வணிகங்கள் மூலம் வாழ்வாதார வாய்ப்புகளும் உருவாகும் என்றார்.

சுற்றுலா மையமாகுமா கூழையாறு கடற்கரை?
‘பாலன்’ படம் எப்படி? - வீடியோ விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in