

நீலகிரி: முதுமலையில் வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கு பல்வேறு வன விலங்குகளும், 260 ரக பறவையினங்களும் உள்ளன. ஆசியாவின் மிகப் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் இங்கு உள்ளது.
வளர்ப்பு யானைகளை காணவும், வனத்தினுள் சவாரி செல்லவும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். வனத்துறை மூலம் ஜீப், வேன் ஆகிய வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகள் செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் மைய வாழ்விட சுற்றுலா பகுதிகளில் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து முதுமலை வனச்சரகர் யுவராஜா கூறும்போது, “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி மைய வாழ்விட சுற்றுலா மண்டலங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவாரி செல்லும் பார்வையாளர்கள் தங்களது செல்போன்களை சவாரி வாகனங்களில் பாதுகாப்பாக ஒப்படைத்து, பயணம் முடிந்த பின்பு பெற்றுக்கொள்ளலாம். பார்வையாளர்களின் ஒருமித்த ஆதரவே வன விலங்குகள் பாதுகாப்புக்கு பெரும் உதவியாக இருக்கும்” என்றார்.