

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் கொங்கு மட்டன் பிரியாணி முதல் விருதுநகர் பரோட்டா வரை 235 வகையான உணவு வகைகளுடன் கூடிய பிரம்மாண்ட உணவுத் திருவிழா நாளை (டிச.21) முதல் தொடங்குகிறது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினர் பொருளாதார ரீதியாகத் தன்னிறைவு பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மகளிர் குழுவினரின் சமையல் திறமையையும், தரமான தயாரிப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட் நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 24-ம் தேதி (புதன்கிழமை) வரை 4 நாள் உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில் 38 மாவட்டங்களை சேர்ந்த பாரம்பரிய சுவை மிக்க உணவுகளான ஆம்பூர் மற்றும் திண்டுக்கல் பிரியாணி, கொங்கு மட்டன் பிரியாணி, விருதுநகர் புரோட்டா, கடலூர் மீன் புட்டு, கருவாடு சூப், அரியலூர் தோசை, மயிலாடுதுறை இறால் வடை, சிவகங்கை நெய் சாதம், தென்காசி உளுந்தங்களி, தருமபுரி ராகி அதிரசம், சேலம் தட்டு வடை, காஞ்சிபுரம் கோயில் இட்லி, நீலகிரி ராகி களி, தூத்துக்குடியின் யாழ் உணவுகள் உள்ளிட்ட 235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம்பெறுகின்றன. இதற்காக 38 பிரத்யேக உணவு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர அடுப்பில்லா முறையில் தயாரித்த உணவுகள், பனை பொருட்கள், 90’களின் நினைவுகளை தூண்டும் தின்பண்ட வகைகள், செட்டிநாடு பலகாரங்கள் போன்றவற்றை விற்பனை செய்ய ஏதுவாக 12 சிறப்பு அரங்ககுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தொடக்க நாளான இன்று மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், நாளை முதல் 24-ம் தேதி வரை மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரையும் உணவுத் திருவிழா நடைபெறும்.
இந்நிகழ்வில் உணவு விற்பனை மட்டுமின்றி, மாலை நேரங்களில் பொதுமக்களைக் கவரும் வகையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மகளிர் குழுவினருக்கு விற்பனை நுணுக்கங்கள் மற்றும் சுகாதாரம் குறித்த பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளன. இந்த சுவைமிகுந்த பாரம்பரிய உணவுத் திருவிழாவுக்கு பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து மகளிர் குழுவினரை ஊக்கப்படுத்துமாறு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.