

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் வரும் 21-ம் தேதி கடற்கரை கோயில் வளாகத்தில் நாட்டிய விழா தொடங்க உள்ளதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் இந்திய நாட்டிய விழா, கடற்கரை கோயில் வளாகத்தில் நாள்தோறும் மாலையில் தொடங்கி இரவு வரையில் என ஒரு மாதம் நடைபெறும்.
இதில், நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய கலை நகழ்ச்சிகளான பரத நாட்டியம் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், நாட்டுப்புற நடனங்கள் மற்றும் கதகளி, குச்சுப்புடி, ஒடிசி, மோகினி ஆகிய நடனங்கள் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும்.
இதனை, உள்ளூர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்பது வழக்கம்.
இந்நிலையில், 2025-26-ம் ஆண்டுக்கான நாட்டிய விழா மாமல்லபுரத்தில் வரும் 21-ம் தேதி தொடங்கி, ஜனவரி மாதம் 19-ம் தேதி வரையில் நடைபெற உள்ளதாக சுற்றுலாத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. விழாவுக்கான ஏற்பாடுகளை, தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.