சுட்டெரிக்கும் வெயிலால் குற்றாலம் அருவிகள் வறண்டன

சுட்டெரிக்கும் வெயிலால் குற்றாலம் அருவிகள் வறண்டன

Published on

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் மீண்டும் சுட்டெரிக்க தொடங்கியுள்ள நிலையில் குற்றாலத்தில் அனைத்து அருவிகளும் வறண்டு விட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்புவரை கோடை மழை பெய்துவந்தது. இதனால் ஓரளவுக்கு வெப்பம் தணிந்திருந்தது. கடந்த ஒரு வாரத்துக்குமுன் கோடை மழையால் குற்றாலத்தில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.

மழை குறைந்ததை தொடர்ந்து மீண்டும் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கோடை வெயில் மீண்டும் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து முற்றிலும் குறைந்து வறண்டு விட்டன. பழைய குற்றாலம் அருவியில் நேற்று பாறையை ஒட்டி தண்ணீர் வழிந்தது. மற்ற அருவிகளில் தண்ணீர் விழவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in