பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்: சுற்றுலா பயணிகளுக்கு தடை

பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்: சுற்றுலா பயணிகளுக்கு தடை
Updated on
1 min read

உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதால் அருவிக்கு செல்லவும், அமணலிங்கேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனத்துக்காகவும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

கடந்த சில நாட்களாக உடுமலை சுற்றுவட்டாரத்தில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள குருமலை, குழிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. அதனால் பஞ்சலிங்க அருவியில் வெள்ளம் ஏற்பட்டது.

அப்போது அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினரும், கோயில் ஊழியர்களும் வெளியேற்றினர். கோயிலின் அடிவாரப் பகுதியில் அருவிக்கு செல்லும் பாதையை தடுப்பு கொண்டு அடைத்து, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து கோயில் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘நேற்று காலைமுதல் வழக்கமான தட்பவெப்ப நிலையே இருந்தது. பிற்பகல் 3 மணியளவில் மலைப்பகுதியில் பெய்த மழையால், அருவியில் வெள்ளம் ஏற்பட்டது. அதனால் பொதுமக்கள் யாரும் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. இன்று வானிலை நிலவரத்தை பொறுத்து பொதுமக்கள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்’’ என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in