Published : 26 Apr 2023 06:20 AM
Last Updated : 26 Apr 2023 06:20 AM

பொதுமக்களுக்கு 3 வகை சுற்றுலா: விருதுநகர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை ஏற்பாடு

மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன்

விருதுநகர்: பொது மக்களுக்கு 3 வகையான சுற்றுலா திட்டங்களை மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத் துறையும் திட்டமிட்டு ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள், பாரம்பரிய மரபு சின்னங்கள், வரலாற்று சிற்பங்கள் மற்றும் தொன்மையான நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றையும், சிவகங்கை மாவட்டத்தில் கீழடி அருங்காட்சியகத்தில் உள்ள அகழ் வைப்பகத்தையும் மாவட்ட மக்கள் அறிந்து தெரிந்து கொள்வதற்கு சிறப்பு சுற்றுலாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி ஒருநாள் கீழடி சுற்றுலா, ஒருநாள் பாரம்பரிய மரபு பயணம் மற்றும் ஒருநாள் உள்ளூர் சுற்றுலா செல்வதற்கு மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. ஒருநாள் கீழடி சுற்றுலாவில் கீழடி மற்றும் திருப்பரங்குன்றம் சுற்றுச்சூழல் பூங்காவுக்கும், ஒருநாள் பாரம்பரிய மரபு பயணத்தில் மூவரைவென்றான் குடவரைக்கோயில், குன்னூர் குத்துக்கல், கல்தூண் மண்டபங்கள், நடுகற்கள், பெருங்கற்கால நினைவிடங்கள், நாயக்கர் அரண்மனை உள்ளிட்ட இடங்களுக்கும், ஒருநாள் உள்ளூர் சுற்றுலாவில் செண்பகத்தோப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மற்றும் நாயக்கர் அரண் மனை உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து செல்லப்படுவர்.

இச்சுற்றுலா, விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, மாலை 6 மணிக்கு திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருநாள் சுற்றுலா சென்று வருவதற்கு ஒரு நபருக்கான கட்டணம் ரூ.300 (மதிய உணவு உட்பட). வாரந்தோறும் சனிக்கிழமையன்று சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள சுற்றுலா இடத்தை பொதுமக்கள் தாங்களே தேர்வு செய்து, க்யூ ஆர் மூலம் கட்டணத்தை செலுத்தலாம். கட்டணம் செலுத்திய விவரம், பெயர் மற்றும் முகவரியை 93619-93400 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x