Published : 13 Apr 2023 04:03 AM
Last Updated : 13 Apr 2023 04:03 AM

கோவையில் இருந்து திருப்பதிக்கு ரயிலில் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்யலாம்: ஐஆர்சிடிசி

கோவை: இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் செவ்வாய்க் கிழமைகளில் கோவையில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தின் கீழ் பயணிக்க விரும்புவோர் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி பாலாஜி தரிசன சுற்றுலா திட்டத்தின் கீழ், ஓர் இரவு, 2 நாட்கள் கொண்ட சுற்றுலாவில் திருமலை,காளஹஸ்தி கோயில், பத்மாவதி கோயில் ஆகிய இடங்களை சுற்றிப் பார்க்கலாம். பயண திட்டப்படி,

முதல் நாளில் கோவை - திருப்பதி இடையிலான ரயில் (எண்:22616) செவ்வாய்க் கிழமைகளில் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடையும். வழியில், திருப்பூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். திருப்பதி, காளஹஸ்தி, பத்மாவதி கோயில் தரிசனத்தை நிறைவு செய்துவிட்டு,

இரண்டாம் நாள் (புதன்கிழமை) மதியம் 2 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் ரயில் (எண்:22615), இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை, சேர் கார் என தங்களுக்கு எது விருப்பமோ அதில் முன்பதிவு செய்து பயணிக்கலாம். மொத்த கட்டணத்தில் பயண காப்பீடு, சுற்றுலா வழிகாட்டி,

தரிசன டிக்கெட் கட்டணம், ஹோட்டலில் ஏசி அறையில் தங்கும் வசதி, முதல்நாள் இரவு உணவு, மறுநாள் காலை சிற்றுண்டி, வாகன வசதி உள்ளிட்டவை அடங்கும். வரும் ஏப்ரல் 18, 25, மே 2, 9, 16, 23, 30, ஜூன் 6, 13, 20, 27, ஜூலை 4, 18, 25 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்யவும், கட்டண விவரங்களை தெரிந்துகொள்ளவும் 9003140655 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x