கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளதால் உதகைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

உதகை தாவரவியல் பூங்காவில் திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் கூட்டம். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |
உதகை தாவரவியல் பூங்காவில் திரண்டிருந்த சுற்றுலா பயணிகள் கூட்டம். | படம்: ஆர்.டி.சிவசங்கர் |
Updated on
1 min read

உதகை: கோடை சீசன் களை கட்ட தொடங்கியுள்ளதால், உதகைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. சமவெளிப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், சில மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸையும் தாண்டிவிட்டது.

இதனால், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. வார விடுமுறை நாளான நேற்று முன்தினமும், நேற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உதகையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தனர்.

தாவரவியல் பூங்காவில் நேற்று வழக்கத்தைவிட சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. நுழைவுவாயிலில் டிக்கெட் பெறகூட்டம் அலைமோதியது. இதேபோல, ரோஜா பூங்காவில் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.

உதகை படகு இல்லத்தில் மிதி படகு, துடுப்பு படகு, மோட்டார் படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர். குதிரை சவாரி செய்தும் உற்சாகமடைந்தனர். பைன் பாரஸ்ட், ஷுட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், தேயிலை பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதேபோல, குன்னூர் உட்பட பல்வேறு இடங்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருந்தது. உதகை கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், தாவரவியல் பூங்கா சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

சாலையோரத்தில் வாகனங் களை நிறுத்தியதால், போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் குன்னூரில் இருந்து உதகைக்கு வரும் வாகனங்கள், லவ்டேல் சந்திப்பில் காந்தி நகர் வழியாக திருப்பிவிடப்படுகின்றன. கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் உதகை களைகட்டியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in