Published : 10 Apr 2023 06:42 AM
Last Updated : 10 Apr 2023 06:42 AM

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெருக்கடியை சீரமைக்க கோரிக்கை

ஏற்காட்டில், ஒண்டிக்கடை அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்படும் சுற்றுலா வாகனங்களால் சாலையில் ஏற்பட்டிருந்த போக்குவரத்து நெருக்கடி.

சேலம்: கோடை விடுமுறை காரணமாக, ஏற்காடு வரும் சுற்றுலா வாகனங்கள் அதிகரித்து, அங்கு போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக ஏற்காடு உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஏற்காடு வந்து செல்கின்றனர். இதனால், தற்போது சுற்றுலாப் பயணிகளால் ஏற்காடு திருவிழாக் கோலத்தில் காட்சியளிக்கிறது.

குறிப்பாக, ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்து மகிழவும், காட்சிமுனைப் பகுதிகளில் அமர்ந்து, சேலம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை, கழுகுப் பார்வையில் பார்த்து ரசிக்கவும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இதேபோல, குடும்பத்துடன் வருபவர்கள், புதுமணத் தம்பதிகள் உள்ளிட்டோர் அண்ணா பூங்கா, ரோஜாத் தோட்டம், ஏரிப் பூங்கா உள்ளிட்ட இடங்களில் பூத்துக் குலுங்கும் பல்வேறு மலர்ச்செடிகளை கண்டு ரசிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.

இதனிடையே, ஏற்காடு சுற்றுலா வருபவர்களில் பலரும் கார்கள், சுற்றுலா வேன்கள் ஆகியவற்றிலேயே அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இந்நிலையில், ஏற்காட்டில் சுற்றுலா வருபவர்களில் பலரும், ஏரிக்கரை அருகே சாலையோரத்தில் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிடுகின்றனர். இதனால், சாலையின் பரப்பளவு குறைந்து, வாகனங்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு, தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கூறியது:

ஏற்காடு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. பலரும் கார்கள், சுற்றுலா வேன்களில் வந்து செல்லும் நிலையில், அவற்றை முறையாக நிறுத்திவிட்டு சுற்றுலா இடங்களுக்கு செல்லும் வகையில், முக்கிய இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். மேலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், முறையான போக்குவரத்து ஏற்பாடு மற்றும் கண்காணிப்பை போலீஸார் ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் சுற்றுலா வருபவர்கள் போக்குவரத்து நெரிசலின்றி வந்து செல்ல முடியும், என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x