வால்பாறை - அதிரப்பள்ளி செல்லும் சாலை திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

வால்பாறை - அதிரப்பள்ளி செல்லும் சாலை திறப்பு: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Updated on
1 min read

பொள்ளாச்சி: வால்பாறை- அதிரப்பள்ளி சாலை திறக்கப்பட்டதால் தமிழக, கேரளா மாநில சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தின் சுற்றுலாதலமான வால்பாறை தமிழக கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. புல்வெளி, பள்ளத் தாக்குகள், நீர்வீழ்ச்சிகளால் ரம்மியமாக காட்சியளிக்கும் வால்பாறையின் அழகை கண்டு ரசிக்க, தினமும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும்சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள கேரளா மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்கின்றனர்.

கேரளா மாநிலம் மளுக்குபாறையிலிருந்து, அதிரப்பள்ளி, ஆனைக்காயம் வரை ரூ.21 கோடி செலவில் சாலை சீரமைக்கும் பணி கடந்த மாதம் 12-ம் தேதி தொடங்கியது. இதனால் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் சுற்றுலா பயணிகள் வாகனங்கள் உள்ளிட்ட எந்த வாகனமும் கடந்த 4-ம் தேதி வரை அனுமதிக்கப்படவில்லை.

இதனிடையே அதிரப்பள்ளி முதல்ஆனைக்காயம் வரை சாலை மேம்படுத்தும் பணி நிறைவடையாத நிலையிலும், கோடை சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் நலன் கருதிவழக்கம் போல வாகனங்கள் செல்ல கேரளா அரசு அனுமதியளித்துள்ளது. இதனால் வால்பாறை - சாலக்குடி வழித்தடத்தில் 23 நாட்களுக்கு பின்னர் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்ல அனுமதி வழங்கியுள்ளதால், இருமாநில சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in