

உதகை: கோடை சீசனின் முக்கிய நிகழ்வான, உதகை குதிரை பந்தயத்துக்காக மைதானத்தை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பந்தயத்தில் பங்கேற்கும் குதிரைகள் உதகையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்தாண்டு முன்கூட்டியே ஏப்ரல் 1-ம் தேதி பந்தயங்கள் தொடங்குகின்றன. கோடை சீசனின்போது நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு நாளில் தொடங்கி ஜூன் வரை உதகையில் குதிரை பந்தயங்கள் நடத்தப்படுகின்றன. இதற்காக பெங்களூரு, சென்னை, புனே உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்படும்.
அதன்படி, பல்வேறு மாநிலங்களிலிருந்து உதகைக்கு குதிரைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. இதையடுத்து, மைதானத்தை தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குதிரைகள் ஓடும் பாதையிலுள்ள புற்கள், உரமிட்டு சமன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், ஓடு தளத்தில் உள்ள புற்கள் ஒரே சீராக வளர தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருவதாக, மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.