Published : 17 Feb 2023 04:30 AM
Last Updated : 17 Feb 2023 04:30 AM

சுற்றுலா பயணிகள் நெருக்கடியை சமாளிக்க குமரியில் ரூ.7 கோடியில் கூடுதல் படகு தளம்

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், அதன் அருகில் உள்ளபாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் அமைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று இவற்றை பார்த்து வருகிறார்கள். இதற்கு வசதியாக தமிழக அரசு பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் மூலம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது. பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.

விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வரும் இந்த 3 படகுகளும், கேந்திரா பணியாளர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டு வரும் "ஏக்நாத்" என்ற படகும் கன்னியாகுமரி வாவதுறை படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலாத்துறை மூலம் ரூ.8 கோடி செலவில் வாங்கப்பட்ட தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய 2 அதிநவீன சொகுசு படகுகளும் தற்போது இந்த படகுத் துறையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சொகுசு படகுகள் வடிவமைப்பில் பெரியதாக உள்ளதால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்ல படகு தளம் ஏற்றதாக இல்லை.

படகுத் துறையில் 2 படகுகளும் பயன்பாடற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் இடநெருக்கடி நிலவுகிறது. இதனால் விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் மற்ற 3 படகுகளும் படகுத்துறைக்குள் வந்து செல்ல மிகவும் சிரமப் படுகின்றன.

படகுத் துறையில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியால் சில சமயங்களில் நிகழும் கடல் சீற்றத்தின் போது இந்தப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்து வருகின்றன. இதை தவிர்க்க படகுத் துறையின் தெற்கு பக்கம் உள்ள கடல் பகுதியில் ரூ.7 கோடி செலவில் கூடுதலாக ஒரு படகு தளம் புதிதாக அமைக்க சுற்றுலாத் துறை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

இதற்கான திட்டமதிப்பீட்டை மீன்வளத்துறை பொறியியல் பிரிவை சேர்ந்த பொறியியல் வல்லுநர்கள் தயாரித்து உள்ளனர். முதல் கட்டமாக படகுத் தளம் கட்ட சிமென்ட் கற்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x