Published : 20 Nov 2022 04:45 AM
Last Updated : 20 Nov 2022 04:45 AM

சிறுமலையில் அழிந்துவரும் பாறை ஓவியங்கள் பாதுகாக்கப்படுமா?

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே சிறுமலையில் அழிந்து வரும் பழங்கால பாறை ஓவியங்களை பாதுகாத்து, சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலுக்கு அடுத்த படியாக இயற்கை எழில் கொஞ்சும் மலைவாசஸ்தலம் சிறுமலைதான். திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ. தொலைவில் 18 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் சிறுமலை அமைந் துள்ளது.

இங்கு பழையூர், புதூர் அகஸ்தியர்புரம், பொன்னுருக்கி, தாளக்கடை, நொண்டி பள்ளம், பசலிக்காடு, தென்மலை உட்பட 10-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. சிறுமலை எப்போதும் குளுமையுடன் காணப்படும். மூலிகைகள், ஓங்கி உயர்ந்த மரங்கள், அடர்ந்த காடுகளுடன் ரம்மியமாக காட்சியளிக்கும் சிறுமலை காப்புக் காடுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் சிறுமலையை ஒருநாள் சுற்றுலா தலமாக்கும் திட்டம் சுற்றுலாத்துறை வசம் உள்ளது.

சுற்றுலா பயணிகளை கவர வனத்துறை சார்பில், தென்மலையில் ரூ.5 கோடி மதிப்பில் பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய ‘பல்லுயிர் பூங்கா’ அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர, அகஸ்தியர்புரத்தில் வெள்ளிமலை சிவன் கோயில், அஸ்தியர் சிவசக்தி சித்தர் பீடம் உள்ளது. ‘டிரக்கிங்’ செல்வதற்கு வெள்ளிமலை ஏற்ற இடம். தமிழர்களின் தொன்மையான வரலாற்றை வெளிப்படுத்தும் விதமாக அகழாய்வுகள், கல் வெட்டுகள் போல பாறை, குகை ஓவியங்களும் குறிப்பிடத்தக் கவை.

சிறுமலை தென்மலை, மீன் குட்டிப் பாறை, கருப்பு கோயில் பகுதிகளில் வெள்ளை வண்ணத்தில் எண்ணற்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. அவை பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் வசித்த ஆதிகால மனிதர்களின் வாழ்வை சித்திரிப்பதாக உள்ளன. வேட்டையாடுதல், நடனம், திருவிழா போன்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. இவற்றை தொல்லியல் துறையினர் கண்டுகொள்ளாமல் இருப்பதால் இவை முட்புதர்கள், செடிகொடிகளால் மூடப்பட்டுள்ளன. அவற்றை சுற்றுலாப் பயணிகள் காண்பதற்கு வசதி யில்லை. ஆகவே அவற்றை பாது காக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிறுமலையைச் சேர்ந்த விவ சாயி எஸ்.தியாகராஜன் கூறிய தாவது: இங்குள்ள மக்கள் விவசாயத்தையும், சுற்றுலாவையும் நம்பித் தான் வாழ்கின்றனர். விவசாயத்தில் பெரிதாக வரு மானமில்லை. சுற்றுலாவை மேம்படுத் தினால் பல ருக்கு வேலை கிடைக்கும். முன்னோர் களின் வாழ்வை உணர்த்தும் இப்பகுதி பாறை ஓவியங்களை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட ஏதுவாக பாதுகாக்க வேண்டும்.

பல்லுயிர் பூங்காவை விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். சிறுமலைக்கு ஆர்வத் துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் இன்றி ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை உள்ளது. ஆகவே சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக குதிரை சவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுவர வேண்டும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x