

கோவை: இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் செவ்வாய்க்கிழமைகளில் கோவையில் இருந்து திருப்பதிக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தின் கீழ் பயணிக்க விரும்புவோர் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருப்பதி பாலாஜி தரிசன சுற்றுலாதிட்டத்தின் கீழ், ஓர் இரவு, 2 நாட்கள் கொண்ட சுற்றுலாவில் திருமலை,காளஹஸ்தி கோயில், பத்மாவதி கோயில் ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்கலாம். கோவை - திருப்பதி இடையிலான சிறப்பு ரயில் (எண்:22616) செவ்வாய்க் கிழமைதோறும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, மதியம் 1.20 மணிக்கு திருப்பதி சென்றடையும். செல்லும் வழியில், திருப்பூர், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ரயில்நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும்.
மறுமார்க்கத்தில், புதன்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண்:22615), இரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும். இந்த ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை, சேர் கார் என தங்களுக்கு எது விருப்பமோ அதில் முன்பதிவு செய்து பயணிக்கலாம். மொத்த கட்டணத்தில் பயண காப்பீடு, சுற்றுலா வழிகாட்டி, தரிசன டிக்கெட் கட்டணம், ஹோட்டலில் ஏசி அறையில் தங்கும் வசதி, முதல்நாள் இரவு உணவு, மறுநாள் காலை சிற்றுண்டி, வாகன வசதி உள்ளிட்டவை அடங்கும். வரும் 15, 22, 29, டிசம்பர் 6,13 ஆகிய தேதிகளில் முன்பதிவுக்கு 9003140655 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.