Published : 25 Aug 2022 04:30 AM
Last Updated : 25 Aug 2022 04:30 AM

கோவையிலிருந்து ராஜஸ்தானுக்கு சிறப்பு விமான சுற்றுலா: ஐஆர்சிடிசி-யில் முன்பதிவு தொடக்கம்

கோவை

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐஆர்சிடிசி) சார்பில் விமானம் மூலம் ராஜஸ்தானில் உள்ள இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக முன்பதிவு தொடங்கியுள்ளது.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவையில் இருந்து ராஜஸ்தானுக்கு வரும்அக்டோபர் 11-ம் தேதி விமானம் மூலம் சிறப்பு சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

8 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவில் அஜ்மீர், புஷ்கர், ஜோத்பூர், ஜெய்சால்மர், பிகானீர், ஜெய்ப்பூர் ஆகிய வரலாற்று சிறப்புமிக்க இடங்களில் அமைந்துள்ள கோட்டைகள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், பாலைவனம் போன்ற இடங்களைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சுற்றுலாவில் விமான கட்டணம், ஏசி ஹோட்டலில் தங்குமிடம், ஏசி வாகன போக்குவரத்து, காலை, இரவு உணவு உள்ளிட்டவை சேர்த்து கட்டணமாக ரூ.40,600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னையிலிருந்து, லே லடாக்குக்கு வரும் செப்டம்பர் 7-ம் தேதி விமானம் மூலம் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

7 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவில், இமயமலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் மிக்க லே, நுப்ரா, பாங்காங் லேக் (இந்தியா-சீனா இடையிலான எல்லையால் பிரிக்கப்பட்ட ஏரி),கர்துங்லா பாஸ் உள்ளிட்ட இடங்களைக் காணலாம். விமான கட்டணம், உள்ளூர்போக்குவரத்து, தங்குமிடம், உணவு,சுற்றுலா மேலாளர், பயண காப்பீடு, ஜிஎஸ்டி உள்ளிட்டவை சேர்த்து கட்டணமாக ரூ.47,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா குறித்த கூடுதல் விவரங்கள், முன்பதிவுக்கு ஐஆர்சிடிசி-யின் கோவை அலுவலகத்தை 9003140655, 8287931962 என்றஎண்களில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.irctctourism.comஎன்ற இணையதளத்தில் விவரங்களை தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x