தொடர் விடுமுறை காரணமாக உதகையில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்

தொடர் விடுமுறை காரணமாக உதகையில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்
Updated on
1 min read

தொடர் விடுமுறை காரணமாக, உதகையிலுள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால் கமர்சியல் சாலை, எட்டினஸ் சாலை, பூங்கா செல்லும் சாலைகளில் வாகன நெரிசல் காணப்பட்டது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மழை பெய்து வந்ததால், சுற்றுலா பயணிகள் வருகை குறைந்திருந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக மழையின் தாக்கம் குறைந்தது.

உதகையில் வெயிலான காலநிலை நிலவியதால், அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் வலம் வந்தனர். அறைகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டபோதிலும், ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் தங்கும் விடுதிகள் நிரம்பி வழிகின்றன. சமவெளிப் பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகம் வந்து கொண்டிருப்பதால், ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மழையால் பைக்காரா அணை நிரம்பி கடல்போல காணப்படுகிறது. இதில், ஸ்பீடு படகு சீறி பாய்ந்து செல்வதால், அதில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர். மேலும், பைக்காரா அணையில்இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், நீர்வீழ்ச்சியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதை காண, பைக்காரா நீர்வீழ்ச்சியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in